உலகம்

’கமலா ஹாரிஸ் சாதனைக்கு அவருடைய அம்மாதான் காரணம்’ சென்னை சித்தி பேட்டி !

jagadeesh

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் சிறுவயதில் இருந்தே நேர்மையானவர் என்று அவரின் சித்தி சரளா கோபாலன் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை பதிவு செய்வார்.

கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன், சென்னையில் பிறந்தவர் ஆவார். முனைவர் பட்டப்படிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்றவர் அங்கேயே குடிபெயர்ந்தார். சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சிறுவயதை கழித்தவர் கமலா ஹாரிஸ். இப்போதும் சென்னையில் கமலாவின் உறவினர்கள் இருக்கிறார்கள். கமலாவின் சித்தியான சரளா கோபாலன் தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் "குழந்தையாக இருந்ததில் இருந்தே கமலாவிடம் இருந்து மிகப்பெரிய விஷயங்களை நாங்கள் எதிர்பார்த்தோம். அவளின் படிப்படியான சீரான வளர்ச்சியை நான் பார்த்துக்கோண்டேதான் வருகிறேன். அவர் சரியான பாதையில்தான் பயணித்துக்கொண்டு வருகிறார். 2017 ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபை உறுப்பினராக கமலா பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்று இருந்தோம். இவ்வளவு உயரங்களை அடைந்தும் கமலா இன்னும் மாறவில்லை" என்றார் சரளா.

மேலும் தொடர்ந்த அவர் "நேரம் மாறுபடும் என்பதால் எங்களால் அடிக்கடி பேச முடிவதில்லை. ஆனால் எப்போது முடிகிறதோ அப்போது கமலா எங்களை தொடர்புக்கொள்வார். நாங்கள் அதேசமயம் மெசேஜ் மூலம் எப்போதும் தொடர்பிலே இருப்போம். கமலாவின் இந்தச் சாதனைக்கு காரணம் அவளுடைய அம்மாதான் என சொல்லலாம். இப்போது கூட கமலா, தன் உரையின்போது தன்னுடைய தாயை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்" என கூறியுள்ளார் சரளா கோபாலன்.