உலகம்

”அதற்காக அழைத்தால் நிராகரித்துவிடுவேன்”.. தன்னை தானே வாடகைக்கு விட்ட ஜப்பான் இளைஞர்!

webteam

ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டுள்ளார்.

டோக்கியோவை சேர்ந்த ஷோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர், தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக புதிய தொழில் தொடங்க யோசித்து, தன்னை தானே வாடகைக்கு விட்டார். கடைக்கு செல்வதற்கு, விளையாடுவதற்கு, எளிதான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றால் தன்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என டிவிட்டரில் பதிவிட்ட அவர், கடினமான வேலைகளை செய்ய மாட்டேன் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து, அந்த இளைஞரை பலர் வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.

மக்களின் தனிமையை போக்க தன்னை தானே வாடகைக்கு விடத் தொடங்கியதாக தெரிவித்துள்ள அவர், வீட்டு வேலைக்கோ, பாலியல் ரீதியாகவோ அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவதாகவும், வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை கேட்டு பொழுதை கழிப்பதற்காக மட்டுமே செல்வதாகவும்
விளக்கம் அளித்தார்.