jammu kashmir x page
உலகம்

பஹல்காம் தாக்குதல் | நெஞ்சை உலுக்கும் புகைப்படம்.. 25 பேர் பலி.. ஸ்ரீநகர் விரைந்தார் அமித்ஷா!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணி பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்குப் பெயர் பெற்றது. இங்குள்ள காடுகள், ஏரிகள் மற்றும் பரந்த புல்வெளிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இங்கு, ஒவ்வோர் ஆண்டும் கோடையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பெரும்பாலும் நடந்துசென்றோ அல்லது குதிரையில் சென்றோதான் பார்வையிட முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் ராணுவ வீரர்கள்போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இதுவரை 25 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகள் மிகவும் அருகிலிருந்து சுட்டதால், காயமடைந்த பல சுற்றுலாப் பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. எனினும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தொலைபேசியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உரையாடினார். அதைத் தொடர்ந்து அமித் ஷா, டெல்லியில் அவசரமாக உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் பலர் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டனர். பின்னர், கூட்டத்தை முடித்த அமித் ஷா அவசரமாக ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அங்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “பயங்கரவாதிகளை ஒழிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முழு தேசமும் கோபத்தில் உள்ளது. நமது படைகளின் இரத்தம் கொதிக்கிறது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் கொடூரமான செயலுக்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நான் தேசத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” ​​தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இந்த பலியானவர்களில் கர்நாடகா, ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபர், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபரின் மரணம் குறித்த செய்தி வெளியானதும், கர்நாடக முதல்வர் சித்தராமையா மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்தி தகவல்களைச் சேகரித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உதவி அல்லது தகவல் தேவைப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக அனந்த்நாக் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பிரத்யேக உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.

தொடர்பு விவரங்கள்:

9596777669

01932225870

வாட்ஸ்அப்: 9419051940

அவசரகால கட்டுப்பாட்டு அறை – ஸ்ரீநகர்:

0194-2457543, 0194-2483651

அடில் ஃபரீத், ஏடிசி ஸ்ரீநகர் - 7006058623