உலகம்

‘அவதார் 2’ கட்டாயம் சரியான நேரத்தில் வெளியாகும் : ஜேம்ஸ் கேமரூன்

webteam

அவதார் 2ஆம் பாகம் அறிவிக்கப்பட்ட தேதியில் சரியாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம், உலக சினிமாவையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்த இப்படம், ஆஸ்கார் விருதுகளையும் வாரியது. இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதில் அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மும்முரம் காட்டி வருகிறார்.

படத்திற்கான பணிகள் மற்றும் படப்பிடிப்புகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படம் முன்பே அறிவிக்கப்பட்ட தேதியான டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகுமா ? என சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் ‘அவதார் 2’ தொடர்பாக ஆங்கில செய்தி இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஜேம்ஸ் கேமரூன், கொரோனா வைரஸால் பல்வேறு தயாரிப்பு வேலைகள் தடைபட்டிருப்பதாகவும், இது பல படங்கள் வெளியாவதை தாமதப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். அத்துடன் இந்த வைரஸ் திரையுலக முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “அவதார் 2ஆம் பாகத்தின் பணிகளை நான் மீண்டும் தொடங்கியிருக்கிறேன். தற்போது நியூஸிலாந்தில் கொரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், சட்டப்படி ஷூட்டிங் எடுக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேசமயம் நியூஸிலாந்தில் கொரோனா பாதிப்பு சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் நாங்கள் ஷூட்டிங் பணிகளை தொடங்குவோம். கண்டிப்பாக அறிவிக்கப்பட்ட தேதியிலேயே ‘அவதார் 2’ வெளியாகும். எங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்து தீவிரமாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும்” என்றார்.