உலகம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மலேசியாவில் போராட்டம்

webteam

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலேசிய தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது தமிழ் பண்பாட்டைக் காக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தின் எதிரொலியாக மலேசியாவின் பத்துமலையில் உள்ள பிரபலமான 140 அடி உயர முருகன் சிலைக்கு முன், இன்று காலை தங்களின் ஆதரவைக் காட்ட தமிழர்கள் திரண்டனர்.

அதேவேளையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்க கோரும் மனு ஒன்றினை மலேசியாவின் 30 க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் நாளைப் பிற்பகலில் வழங்கவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரின் இந்திய வர்த்தக பகுதியான பிரிக்பீல்ட்ஸில் ஜல்லிக்கட்டு தடையை அகற்ற கோரி மலேசிய தமிழர்கள் அதிக அளவில் ஒன்று திரண்டு தங்களது எதிர்ப்பைக் காட்ட ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.