தனது இறந்த தாயாரின் ஓய்வூதியத்தைச் சட்டவிரோதமாகப் பெறுவதற்காக பல ஆண்டுகளாக மாறுவேடமிட்டு மோசடி செய்ய இத்தாலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு இத்தாலிய நகரமான போர்கோ விர்ஜிலியோவைச் சேர்ந்தவர், கிராசியெல்லா டால் ஓக்லியோ. செவிலியரான இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால், இதை மறைத்து அவருடைய ஓய்வூதியத்தைப் பெற அவரது மகன் நினைத்துள்ளார். இதற்காக அவர், 1970களில் அவரது தாயார் பயன்படுத்திய ரவிக்கை, நீண்ட பாவாடை, நெயில் பாலிஷ், முத்து நெக்லஸ் மற்றும் பழங்கால காதணிகளைப் பயன்படுத்தியுள்ளார். அதன்மூலம் அவர் சுமார் 53,000 யூரோக்கள் (சுமார் USD 94,000) பெற்றுள்ளார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 1993ஆம் ஆண்டு ராபின் வில்லியம்ஸ் நடித்த படத்திற்குப் பிறகு, இந்த வினோதமான அத்தியாயம் ’திருமதி டவுட்ஃபயர் ஊழல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், அவருடைய முகத்தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதை அதிகாரி ஒருவர் கவனித்துள்ளார்.
குறிப்பாக, அவருடைய கழுத்து சற்று தடிமனாக இருந்துள்ளது. சுருக்கங்கள் விசித்திரமாக இருந்துள்ளன. மேலும் கைகளில் உள்ள தோல் 85 வயது முதியவரின் தோலைப் போல இல்லை. குரல் பெண்மையாக இருந்தாலும் சில சமயங்களில் ஆண் தன்மை தெரிந்துள்ளது. இதையடுத்து, தாயாரின் படமும் மகனின் படமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையைத் தொடங்கியபோது, அவர் பெண் வேடத்தில் வந்தது அதிகாரிகளை திகைக்க வைத்தது. மேலும், அவர்கள் இதுநாள் வரை ஏமாந்ததையும் உணர்ந்தனர். மோசடியில் ஈடுபட்டதாக அவர் விசாரணையின்போது ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாயின் உடலை ‘மம்மி’ போன்று பதப்படுத்தி வைத்திருப்பதைத் தெரிவித்தார். அந்த உடலைக் கண்டுபிடித்த போலீசார், அவர் இயற்கையான காரணங்களால் இறந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். இருந்தும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்கின்றனர்.