model image
model image freepik
உலகம்

’படிக்காதவன்’ பாணியில் வீங்கிய வயிறு! 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பிணி வேடம்.. அரண்டு போன போலீசார்!

Prakash J

உலகம் முழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சலுகைகளையும் நிதிஉதவியையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதேநேரத்தில், இந்தப் பலன்களைப் பெறுவதற்காக மோசடி சம்பவங்களிலும் சில பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர், 24 ஆண்டுகளாக மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

model image

இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்தவர் பார்பரா ஐயோல். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், 12 முறை கரு கலைந்ததாகவும் கூறி அரசிடம் இருந்து நிதிப் பயன்களைப் பெற்றுள்ளார். அரசு சலுகைகள் மூலம் இந்திய மதிப்பில் 98 லட்சம் ரூபாய் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, மகப்பேறு விடுப்புகளையும் பெற்று, வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

வயிற்றில் தலையணையை வைத்துக்கொண்டு வேலைக்கு வருவது, கர்ப்பிணிகள் கஷ்டப்பட்டு நடப்பதுபோல் மெதுவாக நடந்து வருவது போன்று நடித்து அனைவரையும் நம்பவைத்துள்ளார். அந்தப் பெண் தனது குழந்தைகள் தொடர்பான பொய்யை உண்மையாக்குவதற்காக ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழை திருடியதுடன், அதற்குத் தேவையான போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் மீது கடந்த ஆண்டு சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை பெற்றதாக அவர் கூறியது உண்மையா என்பதை அறிய அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, ஐயோலின் ரகசியம் வெளிப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது அந்தப் பெண் செய்த குற்றங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பட்டியலிட்டனர். ஐயோலின் குழந்தைகளை யாரும் பார்த்ததில்லை, குழந்தைகளின் பெயர்கள் எந்த சட்ட ஆவணத்திலும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

model image

விசாரணையின் முடிவில், அந்த பெண்ணின் கர்ப்பம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 1 வருடம் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக, அவருடைய கணவரிடம் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு உள்ளது. தம் மனைவிக்கு தண்டனை குறைந்து கிடைக்கும் என்ற நோக்கில் அவரும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தனது துணை ஒருபோதும் கர்ப்பமாக இல்லை என அவர் சாட்சியம் அளித்துள்ளார். இதன்பயனாக அவர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணி வருகிறார்.