உலகம்

GO HOME GOTA இலங்கையில் தொடரும் 7 நாள்களைக் கடந்த போராட்டம்!

JustinDurai

இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அலுவலகத்திற்கு அருகே மக்கள் நடத்திவரும் போராட்டம் 7 நாட்களை கடந்துள்ளது. மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து, ஒரு குடும்பத்திற்கு எதிராக போராடி வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஆனாலும், எந்த சலனமும் இன்றி ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி தொடர்கிறது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அலுவலகத்திற்கு அருகே மக்கள் நடத்தி வரும் தன்னெழுச்சிப் போராட்டம் ஏழு நாட்களை கடந்துள்ளது. நேற்று இரவு ஆயிரக்கணக்கானோர் போராட்டக்களத்தில் திரண்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தும் இடத்தில் GO HOME GOTA என்று மின்விளக்குகளால் வடிவமைத்துள்ளனர். அதே போல், ஆடியும், பாடல்கள் பாடியும் அதிபருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இலங்கை மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து, ஒரு குடும்பத்திற்கு எதிராக போராடி வருவதாக போராட்டக்காரர்கள் கையில் பதாகை ஏந்தியிருந்தனர். இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று களத்தில் உள்ள மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: இலங்கை: கைது என பரவிய தகவல்... அரசின் போக்கிற்கு வலுக்கும் கண்டனம்