ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த Proba 3 என்கிற செயற்கைக்கோளை டிசம்பர் 4ம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் அனுப்பவுள்ளது. 23 வருடங்களுக்கு பிறகு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
சூரியன் குறித்தான பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்தாலும், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலம் குறித்தான உண்மைகள் வெளிப்படாமலே இருந்து வருகிறது.
இத்தனைக்கும் நாசா அனுப்பிய பார்க்கர் சூரியனின் மேல் பரப்பை நெருங்கி விட்ட நிலையிலும், கரோனா எனும் வளிமண்டல பகுதியில் ஏற்படும் வெப்பமாற்றத்திற்கான காரணம் அறியப்படாமல் இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பை விட சுற்றி இருக்கும் வளிமண்டலம் அதிக வெப்பத்தோடு இருப்பதற்கான காரணம் இன்னும் வெளிப்படாமலேயே உள்ளது.
சூரியனின் வளிமண்டலமான கரோனா, 20 லட்சம் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை பெற்றிருப்பதால் தான் சூரிய கதிர்வீச்சு தீவிரத்துடன் இருப்பதும் அதனால் அவ்வப்போது பெரிய மாற்றங்களும் நிகழ்கிறது.
அவற்றை கண்டறியும் பொருட்டு Proba - 3 விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக சூரிய கிரகணம் என அழைக்கப்படும் நிகழ்வில் சூரியனின் முழு உருவத்தை சந்திரன் மறைக்கும் போது சூரியனுக்கு மேற்பரப்பில் இருக்கக்கூடிய வளிமண்டல மாற்றத்தை கடந்த 100 ஆண்டுகளாக அறிவியலாளர்கள் நோட்டமிட்டு பரவலாக சேகரித்து வருகிறார்கள். ஆனால் சூரிய கிரகணம் என்பது கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதோடு சில நிமிடங்களில் அவை முடிந்து விடும்.
எனவே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் நிகழும்போது சூரிய வளிமண்டலத்தை நோட்டமிட்டு பல கேள்விகளுக்கான விடையை கண்டறிவது அறிவியலாளர்களுக்கு முடியாத காரியமாக இருந்து வந்துள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து Praba - 3 எனும் திட்டத்தின் படி இரண்டு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளனர்.
200 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் சூரியனின் நிழலை மறைக்கும் வகையிலும், 340 கிலோ எடை கொண்ட கரோனாகிராப் எனும் செயற்கை கோள் தொலைநோக்கியாகவும் செயல்பட உள்ளது. அதாவது செயற்கையாக சூரிய கிரகண நிகழ்வை விண்வெளியில் இருந்து அவ்வப்போது நிகழ்த்தி ஆராய்ச்சி செய்வது தான் இந்த ஒட்டுமொத்த திட்டமும். இந்திய மதிப்பில் சுமார் 1780 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 12 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி துறையின் வெற்றிகரமான ராக்கெட்டான pslv மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிசம்பர் 4ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ள இந்த இந்தத் திட்டம் விண்வெளி துறையில் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகவும் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. செயற்கைக்கோளை 600 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்திய பின்னர் இரண்டு செயற்கைக்கோள்களும் தனித்தனியாக பிரிந்து 19 மணி நேரத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும். அப்போது கிடைக்கும் இடைவெளியின் போது ஒரு செயற்கைக்கோள் சூரியனை மறைத்தும் மற்றொரு செயற்கைக்கோள் தொலைநோக்கியால் குவியப்படுத்தி தரவுகளை சேகரிக்கும்.
இந்தப் புதிய முயற்சிக்கு இஸ்ரோவின் ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் 23 வருடங்களுக்கு முன்பு 2001 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய Praba 1 திட்டத்தையும் இஸ்ரோ தான் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ ஆதித்யா எல் ஒன் திட்டத்தை செயல்படுத்தியுள்ள நிலையில் தற்போதைய Praba 3 திட்டமும் இந்திய விஞ்ஞானிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என கூறப்படுகிறது. டிசம்பர் நான்காம் தேதி ராக்கெட் ஏவு நிகழ்வை மக்கள் நேரடியாக பார்ப்பதற்காக இஸ்ரோ தனது இணையதளம் வழியாக முன்பதிவு செய்வதற்கான சுட்டியை வழங்கியுள்ளது.