2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 74 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
எனினும், காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தான், நேற்று காசாவின் மத்திய பகுதியில் உள்ள நுசெய்ராத் அகதி முகாமில், ஏற்கனவே இஸ்ரேலின் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்திருந்த பாலஸ்தீனரின் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெறுவதற்காக ஏராளமானோர் திரண்டிருந்ததாகவும், அப்போது மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில், இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் உறுப்பினர்களையே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பொதுமக்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல்களையும் ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளது. போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக கூறப்படும் சூழலிலும், காசாவில் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் சர்வதேச அளவில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதாக பல்வேறு சர்வதேச அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.