அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் விரிசல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க உளவு குற்றச்சாட்டுகள், ராணுவ உதவி குறைப்பு வாய்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க நிதியை நம்பாமல், இஸ்ரேல் தானே ஆயுதங்களை உற்பத்தி செய்து வலிமையைப் பெருக்க வேண்டும் என பிரதமர் நெதன்யக்கு வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் ; m.மீரா
அண்மையில் லெபனான் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக தீவிர கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையேயான உறவு மீண்டும் விரிசலைடைந்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அதில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள், நகர்வுகளை இஸ்ரேல் உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டியிருந்தது. இதனால் இஸ்ரேல் உளவு அச்சுறுத்தலை மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. இந்த உளவு சம்பவத்துக்குப் பின் இஸ்ரேலுக்கான இராணுவ உதவியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெற்கு லெபனானிலிருந்து படைகளைத் திரும்பப் பெறவும் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.
மேலும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களைத் தொடர்ந்ததால் ட்ரம்ப்-க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மோதல்களினபோது ட்ரம்ப், நெதன்யாகுவை மிகக் கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில் ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கு வகிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் லெபனான் உட்பட அனைத்து போர்க்களங்களிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த நெதன்யாகு, இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் கட்டுப்படாது என்றும், ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முறியடிக்க தொடர்ந்து போராடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேலின் மேற்குக் கரையில் (west bank) ரிசர்வ் படைப் பிரிவு போர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது பேசிய நெதன்யாகு, ”எங்கள் அமெரிக்க நண்பர்களிடமிருந்து நாங்கள் பல ஆண்டுகளாக பெற்று வந்த ராணுவ ஆதரவை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் நமக்குச் சொந்தமான, சுதந்திரமான ஆயுத உற்பத்தி அமைப்பு தேவை. நமது வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்; அதிகளவிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஈரான் மற்றும் அதன் பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான தற்போதைய போரைத் தொடர, சொந்தமாக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளோம். இது இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், நமது வெற்றி நமது வலிமையைப் பொறுத்தே அமையும்” என்று கூறியுள்ளார்.