மத்திய கிழக்குப் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், லெபனான் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவத் தயாராக இருந்த ஏவுதளங்கள் துல்லியமாகத் தாக்கப்பட்டு வெடித்துச் சிதறிய காட்சிகளை இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானில், இஸ்ரேல், அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கில் தொடங்கிய போர் சுமார் 40 நாள்கள் நீடித்தன. பாகிஸ்தானின் தலையீட்டால், கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ``லெபனான் உள்பட அனைத்து நாடுகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும். இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் நாடுகளின் தூதுக் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் தாக்குதல்களை இரண்டு வாரம் நிறுத்த ஒப்புக்கொண்டார். இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாகச் சொல்லிவிட்டு, லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல என்று இஸ்ரேல் கூறியது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பான புதிய காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவத் தயாராக, ஏவுகணைகள் நிரப்பப்பட்ட நிலையில் இருந்த ஹிஸ்புல்லாவின் ஏவுதளங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் துல்லியமாகத் தாக்கி அழித்தன.
இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது ராக்கெட்டுகளை ஏவிய பயங்கரவாதக் குழுக்களை அடையாளம் கண்டு, வான்வழித் தாக்குதல் மூலம் அவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல்களின்போது எடுக்கப்பட்ட நேரடி வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ஏவுதளங்கள் வெடித்துச் சிதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேலிய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் ஏவுகணைகளைத் தடுப்பதற்கும், தாக்குதல் நடத்தும் குழுக்களை முடக்குவதற்கும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய "முன்னெச்சரிக்கை தாக்குதல்கள்" தொடரும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.