இஸ்ரேல் -  ஈரான்
இஸ்ரேல் - ஈரான் முகநூல்
உலகம்

“இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்!” - இஸ்ரேல் ராணுவத் தளபதி

PT WEB

சிரியா நாட்டு தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் துதரக கட்டத்தின் மீது இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். 1979 இஸ்லாமிய புரட்சிக்குப்பிறகு பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் பகை நீடிக்கிறது.

இருப்பினும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இல்லை. ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. ஆயினும் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இஸ்ரேலில் பெரிய இழப்புகள் ஏற்படாமல் தப்பியது.

இந்நிலையில் ஈரானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று இஸ்ரேலிய ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் Herzi Halevi தெரிவித்துள்ளார். இருப்பினும் எப்போது எங்கு தாக்குதல் நடத்தப்படும் என்ற விவரங்களை அவர் பகிரவில்லை.

இதுதொடர்பாக இஸரேல் பிரதமர் நெதன்யாகு தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டுவந்தாலும் இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில் ஈரான் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றம், மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது.

இஸ்ரேல் நிலைமையை மோசமாக்காமல் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. நிலைமையை மோசமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தினாலும், இஸ்ரேலின் பாதுகாப்பு என்று வரும்போது அந்நாட்டுக்கே தங்கள் ஆதரவு என்று அமெரிக்கா கூறியுள்ளது.