ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் அமைதிப்பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது . முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்று (ஏப்ரல் - 25) பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
அதேபோல, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மத்தியக் கிழக்கில் அமைதி நிலவி வரும் நிலையில், மீண்டும் போரை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் பாதுகாப்புதுறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பேசிய இஸ்ரேல் காட்ஸ், இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், எங்கள் இலக்கு இறுதிசெய்யப்பட்டதாகவும், ஈரானின் உச்சதலைவரான காமேனி குடும்பத்தை முழுவதுமாக அழிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லை என்று கூறிய காட்ஸ், அவர்கள் சுரங்கங்களில் ஒளிந்துகொண்டு இருப்பதால், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதிலும் முடிவெடுப்பதிலும் சிரமப்படுகிறார்கள்; ஈரானின் வானம் திறந்தே இருக்கிறது அதன் அனைத்து தேசிய உள்கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன எனத் தெரிவித்திருக்கிறார்.
அதோடு, அமெரிக்காவின் ஒப்புதல் கிடைத்த பின்னர் இதற்கான வேலை தொடங்கும் என்றும், ஈரான் மீது அடுத்து நடக்கும் தாக்குதல் வித்தியாசமாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.