தென்னிந்தியாவிற்கான இஸ்ரேலிய துணை தூதர் டேமி பென் ஹேர்
தென்னிந்தியாவிற்கான இஸ்ரேலிய துணை தூதர் டேமி பென் ஹேர்  புதிய தலைமுறை
உலகம்

"இப்படியொரு தாக்குதல் எப்படி நடந்திருக்கும்? என ஆய்வு செய்வோம்”- இஸ்ரேலிய துணை தூதர் பிரத்யேக பேட்டி

PT WEB

ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் பெரியளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, வரும் காலங்களில் எந்த அமைப்பினரும் தாக்குதல் நடத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்தியாவிற்கான இஸ்ரேலிய துணை தூதர் டேமி பென் ஹேய்ம் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்.

“இந்த விவகாரம் முடிவுக்கு வந்த
பின்னர் ராணுவம், இஸ்ரேல் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் ஆராயப்படலாம். நாம் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதலை பார்த்துள்ளோம்.
2008-ஆம் ஆண்டு இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. மேலும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலில் பிற பயங்கரவாத தாக்குதலையும் பார்த்துள்ளோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னாள் கடல் வழியாக கப்பல் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதல்களையும் முறியடிக்க முடியும். ஹமாஸ் குழு எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் தங்களது சொந்த உயிரையும் கருத்தில் கொள்வதில்லை.

காசா மக்களின் வாழ்க்கையை பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. யூதர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களை கொல்ல வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் வெற்றிபெறலாம். ஆனால், வாழ்க்கையில் 100 சதவீதம் வெற்றிபெற முடியாது.
தற்போது வரை 900-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,700-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர். ஏராளமான பிணைக்கைதிகள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இஸ்ரேல்- பாலஸ்தீனா போர்


இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறோம். பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களை கொடுமைப்படுத்துவதை பயங்கரவாத கும்பல் பெருமையாக கருதுகின்றனவா என எனக்கு தெரியவில்லை.

ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத குழுக்கள் மீண்டும் தாக்குதல் நடத்தாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.