இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. மொத்த 8 முறை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்து வந்தது. இருப்பினும், இந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமக் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கொழும்பு நகருக்குள் வெடிகுண்டு நிரப்பட்ட லாரி, வேன் நுழைந்ததாக தகவல் வெளியானதால் இலங்கையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிகப்படுகின்றன. கொழும்பு துறைமுக நுழைவாயில் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.