உலகம்

கரீபியன் நாடுகளை சிதைத்த இர்மா புயல் - தரைமட்டமான பார்படா தீவு

கரீபியன் நாடுகளை சிதைத்த இர்மா புயல் - தரைமட்டமான பார்படா தீவு

rajakannan

ஹார்வீ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கும் நிலையில், அமெரிக்காவை ஒட்டியுள்ள கரீபியன் நாடுகளில் இர்மா புயல் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

வீடுகளை மூழ்கடித்து, மரங்களைப் பிடுங்கி எறிந்து, கட்டடங்களைத் தரைமட்டமாக்கி பல தீவுகளைச் சின்னாபின்னமாக்கி இருக்கிறது இர்மா புயல். இது கரீபியன் பிராந்தியத்தில் உள்ள ஆன்டிகுவா பார்படா நாட்டின் பிராந்தியமான பார்படா தீவு. ஒரே நாளில் குப்பை மேடுகளாகவும் கற்குவியல்களாகவும் மாறியிருக்கிறது. அதிவேகமான காற்று, கனமழை, வெள்ளம் என பார்படா தீவு பேரிடைச் சந்தித்திருக்கிறது. 90 சதவிகித வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கின்றன. குறைந்த செலவில் கட்டப்பட்ட வீடுகளின் கூரைகளை சூறைக்காற்று பிய்த்தெறிந்திருக்கிறது. சாலைகளுக்கும் அருகேயுள்ள நீர்நிலைகளுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவின்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நிவாரண முகாம்கள் அமைப்பதற்குக் கூட போதுமான இடங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் உள்ள மற்றொரு தீவான ஆன்டிகுவாவும் புயலின் சீற்றத்துக்குத் தப்பவில்லை. மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும் பார்படாவில் ஏற்பட்ட அளவுக்கு ஆன்குவா தீவில் சேதத்தின் அளவு சற்றுக் குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். சுமார் ஒரு லட்சம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒவ்வொருவரும் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றுலா மூலம் கணிசமான வருவாய் ஈட்டி, அதன் மூலம் வளமாக இருந்து வந்த ஆன்டிகுவா பார்படா நாட்டின் எதிர்காலம் இர்மா புயலால் கேள்விக்குறியாகி இருக்கிறது.

கரீபியன் பிராந்தியத்தில் உள்ள செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்ட்ஸ், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், அமெரிக்கப் பிராந்தியமான பியூர்டோ ரிகோ, டொமினிகன் குடியரசு ஆகியவற்றில் இர்மா புயல் பலத்தை சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிராந்தியங்கள் அனைத்திலும் பேரிடர் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது கரீபியன் பிராந்தியத் தீவுகளுக்கு அபாய எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. பல பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இவை தவிர கியூபாவும், அமெரிக்காவின் புளோரிடா மாநிலமும் இர்மா புயலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் பெருநிலப்பரப்பை இர்மா புயல் எட்டும்போது, வலுக்குறைந்திருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், ஜோஸ், கேத்தியா என மேலும் இரு புயல்கள் அமெரிக்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.