Natanz Nuclear facility , iran  web
உலகம்

"அணுகுண்டு தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.." - உலகை அதிரவைத்த ஈரான்!

ஈரானின் பாதுகாப்புக்காக அணுகுண்டு அவசியம் என ஃபார்ஸ் ஊடகத்தின் கட்டுரை வாதிடுகிறது.

PT WEB

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ, பெறவோ கூடாது என நிரந்தரத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், உச்சத் தலைவருக்கு நெருக்கமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஈரானின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அணுகுண்டே ஒரே தடுப்பு என வலியுறுத்தி உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

செய்தியாளர் ; m.மீரா

பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதால், போர் தொடங்கியது. பின்பு ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானும், அமெரிக்காவும் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டன. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

Trump & Masoud Pezeshkian

இந்த ஒப்பந்த்ததில் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவோ, வாங்கவோ அல்லது பிற வழிகளில் பெறவோ கூடாது என்பதை இந்த ஒப்பந்தம் நிரந்தரமாக உறுதி செய்கிறது. மேலும், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைத் தற்போதைய அளவிலேயே வைத்திருக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட யுரேனியம் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எந்தவொரு தாக்குதலும் நிகழாமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் வான்வழித் தாக்குதல்களும், ஏவுகணை வீச்சுகளும் தீவிரமடைந்துள்ளன.

இந்த ஆயுத மோதல்களுக்கு மத்தியில், ஈரான் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த அணுஆயுதத்தை உருவாக்க வேண்டும் என்று அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையைச் (IRGC) சார்ந்த ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி நிறுவனம் ஈரானின் உச்ச தலைவருக்கு நெருக்கமான ஊடகமாகக் கருதப்படுகிறது.

iran war

மேலும் ஈரானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் அணு ஆயுதத் தடுப்பு மட்டுமே ஒரே வழி என்று அந்த ஊடகக் கட்டுரை வாதிடுகிறது. புதிய உலக ஒழுங்குமுறை (New World Order) உருவாகி வரும் இந்த காலகட்டத்தில், ஈரான் மீது பிற நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க அணு குண்டு தயாரிப்பது கட்டாயமாகிறது. அதைத் தவிர, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், வளைகுடாவில் ஒரு சமநிலையை உருவாக்க அணு ஆயுத பலம் மட்டுமே ஈரானுக்குப் பாதுகாப்பைத் தரும் என்று அந்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இந்த அணு ஆயுதக் கோரிக்கையை முன்வைத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.