trump & mojtaba  Pt web
உலகம்

ஈரானின் 10 அம்ச போர் நிறுத்த நிபந்தனைகள் இதுதான்!

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்தான் கட்டுப்படுத்தும் என்பதும், செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது மற்றும் அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்குவது ஆகியவை ஈரானின் நிபந்தனைகளில் அடங்கியுள்ளது

PT WEB

அமெரிக்கா-ஈரான் பதற்றம் மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மேற்கொண்ட முயற்சியினால் 2 வார தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. டிரம்ப், ஈரானின் மின்சார கட்டமைப்பு, பாலங்கள் மீது தாக்குதல் மிரட்டலை வாபஸ் பெற்று, இருதரப்பு தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டார். ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பான திறப்பு, தடைகள் நீக்கம், அணு செறிவூட்டல் ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட 10 அம்ச நிபந்தனைகள் அமெரிக்காவால் செயல்படுத்தக்கூடியவை என ஏற்கப்பட்டன.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் போக்கு, ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்போது தணிந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியை ஏற்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு இந்த போர்நிறுத்த முடிவுக்குச் சம்மதித்துள்ளன.

DOnald Trump

ஈரானின் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் பாலங்களை அழித்துவிடுவேன் என்ற தனது அச்சுறுத்தலைத் தொடர்ந்து ட்ரம்ப் கடைசி நிமிடத்தில் பின்வாங்கி, ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார. இதனைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவம் ஈரான் மீதான தனது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் தாக்குதல்களை நிறுத்தினால், ஈரானும் தனது தற்காப்பு நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.

சையத் அப்பாஸ் அராக்ஷி

போரில் வெற்றி பெற்றதாக உரிமை கோரியுள்ள ஈரான், தடைகளை நீக்குவது மற்றும் அணு ஆயுத செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட தனது 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி அமெரிக்காவை நிர்ப்பந்தித்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரானிடமிருந்து செயல்படுத்தக்கூடிய 10 அம்ச போர்நிறுத்தத் திட்டம் ஒன்றைப் பெற்றுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதற்கான காரணம், அமெரிக்கா ஏற்கெனவே அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்துவிட்டது என்று கூறியுள்ளார்

ஷெபாஸ் ஷெரீப்

மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படும் அழிவுகரமான சக்தியை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்" என்றும் ட்ரம்ப் கூறினார்

அமெரிக்கா செயல்படுத்தக்கூடியவை என ஏற்றுக்கொண்ட ஈரானின் 10 அம்ச நிபந்தனைகள் :

1.ஆக்கிரமிப்பு செய்யாமை

2.ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டைத் தொடர்வது

3.செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது

4.அனைத்து முதன்மைத் தடைகளையும் நீக்குவது

5. அனைத்து இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்குவது

6.அனைத்து ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவது

7.அனைத்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆளுநர் குழுத் தீர்மானங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவது

8. ஈரானுக்கு இழப்பீடு வழங்குவது

9 . வளைகுடா பகுதியிலிருந்து அமெரிக்கப் போர்ப் படைகளைத் திரும்பப் பெறுவது

10. லெபனானின் வீரமிக்க இஸ்லாமிய எதிர்ப்புப் படைக்கு எதிரான போர் உட்பட, அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது.