கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்குக்காக அவருக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதனிடையே, அவரது தாயார் பிரேமா குமாரி, மற்றும் அவரது நிமிஷாவின் கணவர் ஆகியோர் மத்திய மற்றும் கேரள அரசுகளின் உதவிகளை நாடியுள்ளனர். மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ”நிமிஷா பிரியா விவகாரத்தில் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” என்று ஈரான் உறுதியளித்துள்ளது. நிமிஷா பிரியா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள ஏமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு ஹவுதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளநிலையில், இந்த உறுதிப்பாட்டை ஈரான் அளித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் தூதரக அதிகாரி, ”கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா விவகாரத்தை ஈரான் கவனத்தில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் மனிதாபிமான அடிப்படையில், எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஷரியத் சட்டத்தின்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில், நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. தற்போது, இந்த வழக்கில் உதவ ஈரானும் முன்வந்துள்ளது.
இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கான இழப்பீட்டுத் தொகையை [blood money] வசூல் செய்துவரும் சேவ் இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் உறுப்பினர் பாபு ஜான், ”பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு நிமிஷா பிரியாவை மன்னிக்க ஒப்புக்கொண்டால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனாலும் மத்திய அரசின் அவசர ஆதரவு இதில் முக்கியமானது.
தேவையான தொகையைச் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்கும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஏமனுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் இல்லாவிட்டாலும், நமது இராஜதந்திர முயற்சிகள் இன்னும் ஒரு நேர்மறையான முடிவைக் கொண்டு வரக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால், இஸ்ரேல் மற்றும் காஸாவில் இன்றுவரை போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பினர் உள்ளனர். இதில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த ஹமாஸுக்கு ஆதரவாக உள்ள ஹவுதிப் படையினர் ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் உள்ளனர். அந்த வகையில், ஈரானுடன் இணைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் இந்தியா ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. இதையடுத்தே இந்த வழக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த விஷயத்தில் ஈரான் ஆதரவுக்கரம் நீட்டினால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் முக்கியமான மாற்றங்கள் நிகழலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, தற்போதைய ஈரான் அரசு, கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.