அமெரிக்கா - ஈரான் போரில் நிரந்தர தீர்வை எட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் தயார் செய்து வருவதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
நடந்து வரும் ஈரான் - அமெரிக்கா மோதல், ஒரு சாதாரண இராணுவ பதற்றமாக மட்டும் பார்க்கப்படவில்லை. இந்த மோதலின் பின்னணியில் உலக அரசியல், எண்ணெய் ஆதிக்கம், பிராந்திய செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு அரசியல் போன்ற பல அடுக்குகள் உள்ளன. “யார் யாருக்கு என்ன வேண்டும்?” என்ற கேள்விக்கான பதிலே இந்த மோதலின் மையமாக உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று. உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் பெரிய பகுதி இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதையை கட்டுப்படுத்தும் திறன் ஈரானுக்கு உள்ளது என்பதே உலக நாடுகளை கவலைப்படுத்துகிறது.
இதனாலேயே, உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிக்கல் தொடர்ந்தால் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பொருளாதார பேரழிவு ஏற்படும்.
மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக உலக எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்துவது , ஈரானின் அணு திட்டங்களை கட்டுப்படுத்துவது, இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வது, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் செல்வாக்கை வளைகுடா நாடுகளிடையே குறைப்பது ஆகும்.
ஈரான் தன்னை ஒரு பிராந்திய சக்தியாக நிலைநிறுத்த விரும்புகிறது. பல ஆண்டுகளாக பொருளாதார தடைகள், மேற்கத்திய அழுத்தங்கள், மற்றும் ராணுவ அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் ஈரான், எங்கள் பாதுகாப்பை நாங்களே காப்போம் என்ற நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது. மேலும் தனது திறன்கள் பலவீனமடைந்திருந்தாலும், வெறுமனே அதிகாரத்தில் நீடிப்பதன் மூலம், தாக்குதல்களைத் தாங்கி நின்று மீண்டு வந்து தன்னை நிரூபித்து இந்த மோதலை ஒரு வெற்றியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடர்ந்து அணு ஆய்வு மற்றும் ஏவுகணை திறனை வளர்த்தல் மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுதல் ஆகியவை ஈரானின் அரசியல் நோக்கங்களாக பார்க்கப்படுகிறது..
இஸ்ரேல், ஈரானைத் தனது முதன்மையான அச்சுறுத்தலாகக் கருதுவதால் அதனை நிரந்தரமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்ரேல் தற்போதைய ஈரானிய ஆட்சியை அகற்றவே அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது. தனது பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல்களாகக் கருதும் ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திறன்களைச் செயலிழக்கச் செய்வதே அதன் முதன்மை நோக்கமாகும்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் என்பது நாடுகளுக்கிடையேயான சண்டை மட்டும் அல்ல. இந்த மோதலின் தாக்கம் உலக அளவில் மோசமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.