ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலால், அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு, 210 பில்லியன் டாலர்கள் (17 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும் என ஒரு மதிப்பீடு வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலின் முதல் நாளில் மட்டும் சுமார் 779 மில்லியன் டாலர் (ரூ. 6,466 கோடி) செலவாகியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், கடந்த 5 நாட்களாக இஸ்ரேலும், அமெரிக்காவும் மேலும் ஈரானை ஏவுகணைகளால் சுக்குநூறாகத் துளைத்து வருகின்றன. இந்தப் போர் நீடிக்கும் என அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஈரான் மீது நடத்திவரும் போரால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு 210 பில்லியன் டாலர்கள் (17 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும் என ஒரு மதிப்பீடு வெளியாகியுள்ளது. இத்தொகை இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்பு பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட 3 மடங்கு அதிகமாகும். மேலும் இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 6% ஆகும். இதில், நேரடி ராணுவச் செலவுகள் மட்டும், உபகரணங்கள் இழப்புகள் மற்றும் வெடிமருந்துகளை மாற்றுவது உட்பட சுமார் 65 பில்லியன் டாலர்கள் (ரூ. 5.4 லட்சம் கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வருடாந்திர சுகாதார பட்ஜெட்டைவிட நான்கு மடங்கு அதிகம். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலின் முதல் 24 மணிநேரம் சுமார் 779 மில்லியன் டாலர்களை (ரூ. 6,466 கோடி) அல்லது 2026ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் சுமார் 0.1% செலவழித்துள்ளது.
போர் எவ்வளவு காலம் நீடிக்கும், எவ்வளவு தூரம் தீவிரமடைகிறது என்பதைப் பொறுத்து இது 95 பில்லியன் டாலர்கள் வரை உயரக்கூடும் என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள். மேலும், இச்செலவு தற்போதைய நிலவரம் மட்டுமே என்றும் வரும் நாட்களில் தரைவழித் தாக்குதல் தொடங்கினால் இழப்பு மேலும் உயரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போர்க்களத்தில் ஏற்படும் செலவுகளைத் தவிர, பரந்த பொருளாதார வீழ்ச்சியும் மிகப்பெரியதாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் இடையூறுகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு கூடுதலாக $115 பில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு புறம் இந்தப் போரால், உலகிலேயே மிகவும் பரபரப்பான துபாய் விமான நிலையம் 5 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் அதன் நிர்வாகத்திற்கு தினசரி 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.