masoud pezeshkian  ANI
உலகம்

முடிவுக்கு வரும் தீவிர போர்! சீனாவிடம் மண்டியிடுமா அமெரிக்கா? ஈரான் சொன்னது என்ன?

ஈரான் சொன்ன ஒரு வார்த்தை தான் தற்போது உலக மீடியாக்களில் தலைப்பு செய்தியாக உள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறிய ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலும், அதற்கு பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதும் தான் மிகப்பெரிய போருக்கு காரணமாக மாறியது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரினால், பல உயிர்கள் கொல்லப்பட்டதுடன், உலக பொருளாதாரமே சீரழிந்து கிடக்கிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தபோதிலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. ஈரானின் சாம்ராஜ்ஜியத்தையே சரிப்பதற்காக ஒரு பக்கம் ராணுவ தாக்குதல்களை நடத்தும் அமெரிக்கா, மறுபக்கம் பொருளாதார தடைகளை விதித்து, அந்த நாட்டை தனிமைப்படுத்த முயன்று வருகிறது.

war

ஆனால், அமெரிக்காவின் இந்த முயற்சியை கடுமையாக விமர்சித்துள்ள சீனா, ஒருதலைப்பட்சமான தடைகளும், மிரட்டல் போக்கும் மத்திய கிழக்கு சிக்கலுக்கு தீர்வை தராது என்றும், அனைவரும் பொறுப்புடனும், ராஜதந்திர போச்சுவார்த்தைகளுடனும் சிக்கலை தீர்க்க வேண்டும் என்று சீனா கூறியிருந்தது. இவ்வாறு ஈரானுக்கு ஆதரவாக சீனா கூறி வரும் நிலையில், பொது நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன், உலகமே மகிழும்படியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, “போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. ஈரான் தற்போது ஒரு வலிமையான, கன்னியமான நிலையில் உள்ளது. இந்த சூழலில் போர் நிறுத்தம் செய்வது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்” என்று கூறினார்.

Donald Trump

மேலும், உலகம் நமது வெற்றியை அங்கீகரிக்கிறது கூறிய அதிபர் மசூத் பெசஸ்கியன், சர்வதேச சட்டங்களை மீறி, ஈரானின் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் உலக அளவில் அமெரிக்கா மீது வெறுப்பு நிலவுவதாகவும் கூறினார்.

செப்டம்பர் 24-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, ஈரான் கூறிய போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்காவிடம் அவர் அழுத்தம் தர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் இந்த அழுத்தத்தை தொடர்ந்து அமெரிக்காவும் போரை முடிவுக்கு கொண்டு வருமா? இல்லையா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..