2025ஆம் ஆண்டில் உலகளவில் 17 நாடுகளில் 2,707 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை தெரிவிக்கிறது. 2024ஐ விட 78% அதிகரித்த இந்த எண்ணிக்கையில், 2,159 மரணதண்டனைகளுடன் ஈரான் முதலிடத்தில் உள்ளது.
2025-ஆம் ஆண்டில் 17 நாடுகளில் 2,707 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் 1,518 மரணதண்டனைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மரணதண்டனைகளின் எண்ணிக்கை 78% அதிகரித்துள்ளது . இந்த எண்ணிக்கை 1981-ஆம் ஆண்டிற்குப் பிறகு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பதிவு செய்துள்ள மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
2025 ஆம் ஆண்டில், 2,159 பேருக்கு மரணதண்டனை அளித்து உலகிலேயே அதிக மரணத் தண்டனைகளை நிறைவேற்றிய நாடாக ஈரான் இருக்கிறது. இது 2024-ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
மற்ற இடங்களில், சவூதி அரேபியா 356 பேருக்கு மரணத்தண்டனை அளித்துள்ளது. பெரும்பாலும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 காலக்கட்டங்களில் மரணதண்டனைகள் கொடுத்த விவரம் - குவைத்தில் கிட்டத்தட்ட மும்மடங்காக 6-லிருந்து 17-ஆக அதிகரித்துள்ளது. எகிப்தில் 13-லிருந்து 23ஆகவும், சிங்கப்பூர் 9லிருந்து 17ஆக மற்றும் அமெரிக்காவில் 25-லிருந்து 47-ஆகவும் அதிகரித்துள்ளது .
உலகின் முன்னணி மரணதண்டனை நிறைவேற்றும் நாடாக தொடர்ந்து விளங்கும் சீனாவில், ஆயிரக்கணக்கான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நம்புவதால், 2025-ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையில் அந்த மரணதண்டனைகள் சேர்க்கப்படவில்லை. தரவுகள் தொடர்பான 'சீன அரசின் ரகசியத்தன்மை' காரணமாகவே இத்தகவல்கள் சேர்க்கப்படவில்லை என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் உயர்வுக்கு, அச்சத்தின் மூலம் ஆட்சி செய்யத் தீர்மானித்த சில அரசாங்கங்களே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பொதுச் செயல்பாடுகளுக்கான சுதந்திரத்தை சுருக்கியும், மாற்றுக்குரல்களை ஒடுக்கியும், மனித உரிமைகள் சட்டங்களைப் புறக்கணித்தும், தங்கள் அதிகாரத்தை திணிக்கும் நாடுகளிலேயே இந்த மரண தண்டனைப் போக்கு மிகவும் தீவிரமாக இருக்கிறது என்று அம்னெஸ்டி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, ஈரானில் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை அதிகரிக்க காரணம் குறிப்பாக ஜூன் 2025-இல் இஸ்ரேலுடனான போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அரசியல் ஒடுக்குமுறையின் கருவியாக மரண தண்டனையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.
மரண தண்டனைகள் அதிகரித்திருந்த போதிலும், அவற்றை நிறைவேற்றும் நாடுகள் குறைவாகவே இருப்பதாக அம்னெஸ்டி அமைப்பு கூறுகிறது. சீனா, எகிப்து, ஈரான், ஈராக், வட கொரியா, சவூதி அரேபியா, சோமாலியா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகள்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஆண்டு நான்கு நாடுகள் ஜப்பான், தெற்கு சூடான், தைவான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மரண தண்டனைகளை மீண்டும் தொடங்கின. இதன்மூலம், மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.