Suez Canal  Reuters
உலகம்

அமெரிக்காவுக்கே ஆட்டம் காட்டும் ஈரான்.. அடுத்த இலக்கு சூயஸ் கால்வாய்?

எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாயை மறைமுகமாகத் தன் அடுத்த அழுத்தப் புள்ளியாக மாற்ற ஈரான் முயன்று வருகிறது.

Prakash J

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாயை மறைமுகமாகத் தன் அடுத்த அழுத்தப் புள்ளியாக மாற்ற ஈரான் முயன்று வருகிறது.

Suez Canal

அதாவது, சூயஸ் கால்வாயை அடையும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப்-எல்-மந்தெப் நீரிணை (Bab-el-Mandeb Strait) மற்றும் செங்கடல் (Red Sea) பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அழுத்தம் கொடுக்க ஈரான் முயல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முடக்கி அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டியதுடன், உலக எரிபொருள் விநியோகத்தையும் சீர்குலைத்தது. உலகின் கடல்வழி கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கும், அதன் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவும், கடல்வழி வர்த்தகத்தில் 12 சதவீதம் பாப் அல்-மண்டேப் வழியாகவும் செல்கிறது.

இந்தச் சூழலில்தான் ஜூலை 29 அன்று, அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எனர்ஜோஸ் வின்டர்' என்ற கப்பல் தாக்கப்பட்டது. இதனால் அருகிலிருந்த கப்பலுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தால் அந்த இரண்டு கப்பல்களும் சேதமுற்றன. இந்த இரண்டு கப்பல்களும் எகிப்தின் முக்கிய இயற்கை எரிவாயு மையமும் துறைமுகமுமான டாமியட்டாவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த நாடும் பொறுப்பேற்காத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் மீது கைகாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய கிழக்குப் போர் எகிப்து வரை நீண்டுள்ளது. இதனால், அந்நாடும் அச்சத்தில் உள்ளது.

Suez Canal

மறுபுறம். இந்த தாக்குதலால் எகிப்தின் வசமுள்ள சூயஸ் கால்வாயைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈரான் முயல்கிறது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான மிகக் குறுகிய கடல்வழிப் பாதையான சூயஸ் கால்வாய்க்கு, பாப்-எல்-மந்தெப் நீரிணையானது முதன்மை நுழைவாயிலாகச் செயல்படுகிறது. இந்த பாதையில் அச்சுறுத்தல் ஏற்படும்போது, சூயஸ் கால்வாய் வழியிலான ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. அதாவது, ஈரான் தனது எல்லைகளிலிருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தக் கால்வாயின் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் திறன் உள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். இதையடுத்தே, அது சூயஸ் கால்வாயைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.