அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நடுவே, ஹார்முஸ் நீரிணை பதற்றம் தொடரும் நிலையில், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புபவருக்கு பரிசு வழங்கும் மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. மேலும் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், வளைகுடா முழுவதும் தாக்குதல்களும் மறைமுக மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை நரகத்திற்கு அனுப்புபவருக்கு 58 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிப்பது குறித்து ஈரான் விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய ஈரான் மீதான தாக்குதல்களில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரைக் கொலை செய்வோருக்குப் பரிசுகள் வழங்கும் மசோதா மீது ஈரானிய நாடாளுமன்றம் வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அஜிசி (Ebrahim Azizi), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களைப் படுகொலை செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புக்கும் சுமார் 58.23 மில்லியன் டாலர் வழங்குவதை முறைப்படுத்தும் மசோதா ஒன்றை தயாரித்து வருவதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இது குறித்த செய்தியை ஈரான் ஒயர் மற்றும் தி டெலிகிராஃப் யுகே ஆகியவை வெளியிட்டுள்ளன.
ஈரானின் உச்சதலைவர் கமேனியின் படுகொலையில் டிரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோர் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது எதிர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அஜிஸி கூறியுள்ளார்.
டிரம்ப்பைக் கொல்லுங்கள் என்றழைக்கப்படும் ஒரு பிரச்சாரத்திற்காக ஈரான் இதுவரையில் 50 மில்லியன் டாலர் நிதி ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் அரசு ஆதரவு ஹேக்கிங் குழுவான "ஹண்டாலா"வும் (cyberwarfare group Handala) அடக்குமுறை மற்றும் ஊழலின் முதன்மைக் சூத்திரதாரிகளான டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை ஒழிப்பதற்காக 50 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகக் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த செய்திகள் அதாவது ஈரானின் இந்த பரிசு அறிவிப்புச் சட்டம் ஒரு குறிப்பிடத்தக்க பதற்றம் அதிகரிப்பதற்கான சமிக்ஞையாக கருதப்படுகிறது. இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது இருக்கும் போர் நிறுத்தத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
முன்னதாக ஈரான் தன்னைக் கொல்ல முயற்சித்தால், அவர்களைப் பூமியிலிருந்து துடைத்தெறிய அமெரிக்கா மிகக் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.