உலகம்

அணு விஞ்ஞானி படுகொலை: இஸ்ரேலுக்கு தொடர்பு என ஈரான் குற்றச்சாட்டு!

jagadeesh

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே கொல்லப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிசாதே தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டெஹ்ரானில் அவரது காரை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஃபக்ரிசாதேவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாக்குதலில் ஃபக்ரிசாதேவின் மெய்காப்பாளர்களும் படுகாயம் அடைந்தனர்.

அணு விஞ்ஞானியை படுகொலை செய்த சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாதம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு கூட ஈரானின் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டபோது, இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்தது. தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அதற்கு இஸ்ரேல் தரப்பில் எவ்வித மறுப்போ, விளக்கமோ இதுவரை அளிக்கப்படவில்லை.

அதே நேரம் சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ஈரானின் அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதேவின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதனால், இந்த படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்து வருகிறது. அதுவும் அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் வரும் ஜனவரியில் பதவியேற்கும் சூழலில், ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட வைப்பதற்கான அவரது முயற்சிகள், இந்த படுகொலையால் வீணாகலாம் என பேசப்படுகிறது.

(ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்)

ஈரான் யூரேனியத்தை செறிவூட்டி, அளவுக்கு அதிகமான அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டிய நிலையில், அந்நாட்டுடனான அணுசக்தி உடன்பாட்டை ரத்து செய்து தடைகளை விதித்தார். இந்தச் சூழலில் ஃபக்ரிசாதேவின் படுகொலையை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.