Model Image chat gpt
உலகம்

அடிமேல் அடி வாங்கும் அமெரிக்கா.. Submarine-ஐக் கைப்பற்றிய ஈரான்.. வெளியான பரபரப்பு தகவல்!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் Dive-LD ஆளில்லா நீர்மூழ்கிக் கலனை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: எம்.மீரா

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக வருந்தும் நிலைக்குத் தள்ளப்படும் வரை ஈரான் தனது எதிர்ப்பைத் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஈரான் எப்போதும் போரை எதிர்த்து வந்ததாகவும், மக்களின் நலனையும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே போரைத் தவிர்க்க முயல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Masoud Pezeshkian

ஆனால், நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரான் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை, 27 ஈரானிய விமான நிறுவனங்களைத் தடை செய்துள்ளது. ஈரானின் வர்த்தக விமான நிறுவனங்கள் ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், IRGC ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் ஆட்களைக் கொண்டுசெல்ல தனியார் விமான நிறுவனங்களைப் பயன்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் சூழலில் ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி புதிய பதற்றம் உருவாகியுள்ளது. ஈரானிய புரட்சிகர காவலர்கள் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதைத் தொடர்ந்து, ஐந்து ஈரானிய கச்சா எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்ததாக CENTCOM தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் மிகவும் நவீனமான ஆளில்லா நீர்மூழ்கிக் கலன் ஒன்றை ஹார்முஸ் நீரிணையின் நுழைவாயில் பகுதியில் கைப்பற்றியுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

US warship

இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படையான IRGC-யின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘செபா நியூஸ்’ வெளியிட்ட தகவலின்படி, சிக்கலான உளவு நடவடிக்கையின் மூலம் ‘Dive-LD’ என அடையாளம் காணப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கலனை ஈரான் கைப்பற்றியதாகக் கூறியுள்ளது. இதுதொடர்பான காணொளி ஒன்றையும் ஈரான் வெளியிட்டுள்ளது.

Dive-LD என்பது அமெரிக்காவுக்காக உருவாக்கப்பட்ட ஆழ்கடல் ஆளில்லா நீர்மூழ்கிக் கலன் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல், நீண்ட தூர கடல் பகுதிகளைக் கண்காணிப்பது, உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, எதிரிகளின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இதுபோன்ற ஆளில்லா அமைப்புகளை அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.

Dive-LD 10 நாட்கள் வரை நீருக்குள்ளேயே செயல்படக்கூடியது. மேலும், சுமார் 6,000 மீட்டர் (19,700 அடி) ஆழம் வரை மூழ்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆளில்லா நீர்மூழ்கிக் கலனை கைப்பற்றியதாக ஈரான் கூறியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவமும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதற்கு முந்தைய நாள் கடல் பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா ட்ரோன்களில் ஒன்று செயலிழந்துவிட்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் அந்த சாதனம் ஈரானால் கைப்பற்றப்பட்டதா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. மேலும், அது பழைய மாடல் என்றும், முக்கியமான தகவல்களைச் சேகரிக்கும் திறனோ, ரகசிய சோனார் அல்லது ரேடார் கருவிகளோ அதில் இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.