Donald Trump & Masoud Pezeshkian Pt web
உலகம்

போரின் நோக்கம் மாறிவிட்டதா? அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஈரான்!!

ஈரான் மிக உயர்ந்த அளவிலான அணுசக்தி ஆய்வுகளுக்கு முழுமையாகவும் முற்றிலுமாகவும் ஒப்புக்கொண்டுள்ளது என்று டிரம்ப் கூரியுள்ளார். உண்மை என்ன?

PT WEB

செய்தியாளர் - M.மீரா

பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதால் போர் தொடங்கியது. ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

JD vance & Trump

முதல் கட்ட நேரடிப் பேச்சுவார்த்தையின்போது, ​​ஐ.நா. ஆய்வாளர்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் ஆய்வு நடத்த ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார். அதை மீண்டும் வலியுறுத்தும் வகையில், எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு மிக உயர்ந்த அளவிலான அணுசக்தி ஆய்வுகளுக்கு ஈரான் முழுமையாகவும் முற்றிலுமாகவும் ஒப்புக்கொண்டுள்ளது என்று அதிபர் டிரம்ப் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஈரானின் முடக்கப்பட்ட நிதியை ஈரான் எவ்வாறு செலவிடுகிறது என்பதை அமெரிக்காவே கட்டுப்படுத்தும் என்றும் அமெரிக்க விடுவிக்கும் நிதியில் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே ஈரான் பயன்படுத்தும் . இதில் நமது சிறந்த அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சோளம், கோதுமை மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவையும் அடங்கும் என்று டிரம்ப் 'தனது ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஈரான் தனது எரிவாயு மற்றும் எண்ணெயை மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் அமெரிக்க நிதித்துறை திங்களன்று பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தியுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்துகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அமெரிக்கா விடுவிக்கும் நிதியைப் பொறுத்தவரை, நாட்டின் நலன்களுக்கும் அதிகபட்ச நன்மைக்கும் உகந்த வகையிலேயே நாங்கள் முடிவுகளை எடுப்போம். ஈரானின் விருப்பப்படியே அந்த நிதி செலவிடப்படும் என்றார்.

Esmail Baghaei

ஈரானை வீழ்த்துவதே போரின் குறிக்கோளாக கொண்டிருந்த அமெரிக்காவின் பிரதான நோக்கம் தற்போது அமெரிக்க விவசாயிகளை மேலும் பணக்காரர்களாக்குவதாகச் சுருங்கிவிட்டது என்பது எங்களுக்குச் சுவாரஸ்யமாக இருக்கிறது என்றார்.

மேலும் அணுசக்தி தளங்களில் ஆய்வுகளை நடத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.