உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், கார்க் தீவில் உற்பத்தி செய்யப்படும் தனது எண்ணெய்யைச் சேமித்து வைக்க ஈரானுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்திருக்கிறது. இதற்கிடையில், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார்க் தீவில் உற்பத்தி செய்யப்படும் தனது எண்ணெய்யைச் சேமித்து வைக்க ஈரானுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்காலிக ஏற்பாடாகப் பழைமையான எண்ணெய்க் கப்பல்களை அது நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஈரானின் எண்ணெய் தொழிலுக்கு மையமாக விளங்கும் கார்க் தீவு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏறக்குறைய 90% பங்கைக் கொண்டுள்ளது. இந்தத் தீவு, ஒருநாளைக்குச் சுமார் 7 மில்லியன் பீப்பாய்களை ஏற்றும் திறன் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வடக்கு பாரசீக வளைகுடாவின் கடற்பரப்பில் அமைந்துள்ள அந்தச் சிறிய பவளத் தீவில், 30 மில்லியன் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க முடியும். ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தடைகள் காரணமாக அதன் கொள்ளளவை நெருங்கி வருகிறது.
குறிப்பாக, அப்பகுதியில் கச்சா எண்ணெய் குவியத் தொடங்கியுள்ளது. அதாவது, அங்கு இன்னும் 13 மில்லியன் பேரல் எண்ணெய்யை மட்டுமே சேமிக்க் இடமுள்ளது என்றும், ஒருநாளைக்கு சுமார் 1 மில்லியன் முதல் 1.1 மில்லியன் பேரல்கள் வரை நிகர உள்வரவு உள்ளது என்றும் கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விகிதத்தில் சென்றால், 12-13 நாட்களில் சேமிப்புக் கிடங்கு நிரம்பிவிடும் என்று அவர்கள் கணிக்கின்றனர். இதனால், மீதமுள்ள எண்ணெய்யைச் சேமிக்க இடமின்றி ஈரான் தவித்து வருகிறது.
இந்த நிலையில்தான், தனது 30 ஆண்டுகள் பழமையான 'நஷா' என்ற எண்ணெய்க் கப்பலை, கடலில் உபரி எண்ணெயைச் சேமிப்பதற்காக ஈரான் அரசு புதுப்பித்து வருகிறது. இதன்மூலம், கடலிலேயே எண்ணெய்யைச் சேமித்து வைக்க முடியும் என ஈரான் நம்புகிறது. இது ஒரு தற்காலிகத் தீர்வுதான் என்றாலும், ஈரான் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருப்பதை அது காட்டுகிறது. சேமிப்பு அதன் முழு கொள்ளளவை எட்டினால், ஈரான் கடுமையான இக்கட்டான நிலையை எதிர்கொள்ளக்கூடும். தவிர, எண்ணெய்யைச் சேமிக்க முடியாத காரணத்தால், அதைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் சேமிப்பில் இருக்கும் எண்ணெய்யையும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், ஈரானுக்கு வருவாயும் குறைந்துபோகும். இதையறிந்தே அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது. இதையடுத்து வரும் நாட்களில் ஈரானுக்கு இது பேரிடியாக அமையும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இது அமெரிக்காவுக்குச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.