முகமூடி அணிந்த நபர் Pt web
உலகம்

காமேனி இறுதிச் சடங்கு.. முகமூடி அணிந்த நபர் யார்? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!!

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கில் கருப்பு நிற முகமூடி அணிந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த மர்ம நபர் யார் என்ற கேள்வி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மர்மத்துக்கு பதில் கிடைத்துள்ளது.

Premkumar S

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது மகனான மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். எனினும், பதவியேற்றது முதல் இதுவரை அவர் ஒருமுறைகூட பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. இதற்கிடையில் தான், போர் சூழலால் தள்ளிவைக்கப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், அவர் உயிரிழந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 4 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது. ஏற்கனவே, இந்த நிகழ்வில் மொஜ்தபா காமேனி பங்கேற்க மாட்டார் என ஈரான் அதிகாரிகள் உறுதிபடுத்தியிருந்தனர்.

இந்தசூழலில் தான், காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வில், கருப்பு நிற முகமூடி மற்றும் கருப்பு தொப்பி அணிந்த ஒருவர் முன்வரிசையில் அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த வீடியோவில் இருக்கும் நபர், காமேனியின் மகனும் ஈரானின் புதிய உச்சத் தலைவருமான மொஜ்தபா காமேனியாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த மர்மத்திற்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.

ஈரானைச் சேர்ந்த செய்தி நிறுவனமான ஈரான் இண்டர்நேசனல் (Iran International) வெளியிட்ட தகவலின்படி, கருப்பு முகமூடி அணிந்து இருந்த அந்த நபர் மொஜ்தபா காமேனியல்ல எனவும் அவர், அயதுல்லா அலி காமேனியின் மூத்தப் பேரனும், மொஜ்தபா காமேனியின் மகனுமான முஹம்மது ஜவாத் காமேனி எனவும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முஹம்மது ஜவாத் காமேனி, கடுமையாகக் காயமடைந்து, குறிப்பாக முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் தனது முகத்தை கருப்பு முகமூடியால் மறைத்தபடி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.