ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கும் அதேநேரத்தில், கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே ஒரு மாதமாக நடைபெற்றுவரும் போர் அடுத்தகட்டமாக, மிகவும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ”ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால் அந்நாட்டின் அணு உலைகளும் பாலங்களும் தகர்க்கப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார். அந்தக் கெடு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இதற்கிடையே, அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்பட முடியாது" என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனாலும், அவரது கருத்துக்கு ஈரான் சற்றும் பின்வாங்காது, அதை எதிர்கொள்ளும் விதத்திலும், அதற்கான ஆயத்தங்களுடன் இருப்பதாகவே வல்லுநர்கள் கருதுகின்றனர். இது ஒருபுறமிக்க.. மறுபுறம் இன்னும் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடுவே முடியாத நிலையில், இன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பல நகரங்கள் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளன. அதன்படி, ரயில்வே பாலங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் (IRGC) ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், ஈரான் முழுவதும் உள்ள சுமார் 10 முக்கிய ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது என 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இருதரப்பும் அடுத்தகட்டம் குறித்து தீவிரமாக யோசித்து வரும் நிலையில், ”ஈரானில் தனது இராணுவ நோக்கங்களை அமெரிக்கா பெருமளவில் நிறைவேற்றிவிட்டது” என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், ”எங்களிடம் உள்ள கருவிகளை இதுவரை பயன்படுத்த நாங்கள் முடிவு செய்யவில்லை என்பதை ஈரான் தெரிந்துகொள்ள வேண்டும். ஈரான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவற்றைப் பயன்படுத்தக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, மோதலைத் தீவிரப்படுத்தவோ அல்லது ஈரானிய உள்கட்டமைப்பைக் குறிவைக்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும். நீங்கள் ஒரு போரைத் தொடங்கினால், அதை உங்களால் முடிக்க முடியாது என்று நாங்கள் கூறினோம். மீண்டும் கூறியுள்ளோம்: நீங்கள் எங்கள் உள்கட்டமைப்பைக் குறிவைத்தால்… கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானில் அரியணை ஏறிய முகமது ரெசா ஷாவுக்கு எதிராக போராட்டங்கள் விளையவே அவர், 1979 ஜனவரி 16 அன்று நாட்டைவிட்டு வெளியேறினார். அப்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்த அவரை, இரானிடம் ஒப்படைக்க வேண்டும் என இஸ்லாமிய மதத் தலைவர் அயதுல்லா காமேனி தலைமையிலான புதிய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் ஷா அங்கிருந்து எகிப்து சென்றதால் இது நடைபெறவில்லை. இதனால் அயதுல்லா காமேனிக்கு ஆதரவாக இருந்த மாணவர் படையால் 1979 நவம்பர் மாதம் அமெரிக்க தூதரகத்தில் இருந்தவர்கள் பிணைக்கைதிகளாக சுற்றிவளைக்கப்பட்டனர். 444 நாள்களுக்கு இந்த முற்றுகை நீடித்தது. பின்னர் 1981 ஜனவரியில் தூதரகத்தில் இருந்த 52 பேர் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனின் பதவியேற்பு அன்று விடுவிக்கப்பட்டனர். இதைத்தான் ஈரான், தற்போது நினைவுகூர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.