ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கிய முதல் நாளில் உச்ச தலைவர் அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். தெஹ்ரான் கிராண்ட் மொசல்லாவில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மஷ்ஹத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதேநாளில், அவரது தெஹ்ரான் இல்ல வளாகத்தில் ஏற்பட்ட கடுமையான சேதத்தை காட்டும் 35 வினாடி காணொளியை அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
செய்தியாளர் ; M. மீரா
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் முதல் நாளான பிப்ரவரி 28 அன்று காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது 14 மாதப் பேத்தி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அலி கமேனியின் உடல் அடங்கிய சவப்பெட்டி தெஹ்ரான் கிராண்ட் மொசல்லாவில் (Tehran Grand Mosalla) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது; பின்னர் அது தெஹ்ரான் மற்றும் கோம் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, இன்று ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே, இறுதிச்சடங்கு நிகழ்வின்போது அதில் பங்கேற்றிருக்கும் ஈரான் தலைவர்களை ஒரே அடியில் அழிக்க முடியும் என ட்ரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையில் ஒரேநாளில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் பதிலடி கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் மேற்கொண்ட குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிட்டது என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், இன்று நடைபெற்ற காமேனியின் இறுதிச் சடங்குகளுக்கு மத்தியில், ஈரானின் அரசு ஊடகம் முதன்முறையாக, அலி காமேனியின் வீட்டு வளாகத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைக் காட்டும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதாவது, அவர் கொல்லப்பட்ட நாளின் ஏற்பட்ட சேதத்தை வெளியிட்டுள்ளது. 35 வினாடிகள் ஓடக்கூடிய இந்தக் காணொளி, காமேனியின் தெஹ்ரான் வீட்டு வளாகத்திற்குள் அமைந்துள்ள 'இமாம் கொமேனி ஹுசைனியா' (வழிபாட்டுக்கூடம்) பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதங்களையும் சிதைவுகளையும் காட்டுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் முதல்நாளில் ஏற்பட்ட அழிவின் தீவிரத்தை இந்தக் காணொளி வெளிப்படுத்துகிறது; காமேனி உச்சத்தலைவராக இருந்தபோது பொதுமக்களிடையே உரையாற்றுவதற்கான முக்கிய இடமாக இந்தக் கட்டடம் திகழ்ந்து வந்ததாக அச்செய்தி கூறுகிறது.