அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாட்டின் முன்னாள் அதிபரான முகமது அகமதி நெஜாத்தை புதிய அதிபராக நியமிக்கத் திட்டமிட்டதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுத்துவதற்கு பாகிஸ்தான் இருதரப்பிலும் மத்தியஸ்தம் செய்து வருகிறது. எனினும், இவ்விவகாரத்தில் சுமுகம் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திலேயே காணப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாட்டின் முன்னாள் அதிபரான முகமது அகமதி நெஜாத்தை புதிய அதிபராக நியமிக்கத் திட்டமிட்டதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போக்குடைய அகமதி நெஜாத், தற்போதைய ஈரான் ஆட்சியாளர்களை ஊழல்வாதிகள் என விமர்சித்ததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்கவே, போர் தொடங்கிய முதல்நாளில் இஸ்ரேல் அவர் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இத்தாக்குதலில் அகமதி நெஜாத் காயமடைந்ததால் இத்திட்டத்தில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரம், வெனிசுலாவில் அமெரிக்க ஆதரவுடன் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆட்சியைக் கைப்பற்றியதுபோல, ஈரானின் அரசியல் மற்றும் ராணுவச் சூழலைக் கையாளும் திறன்அகமதி நெஜாத்துக்கு இருப்பதாக அமெரிக்கா நம்பியதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.