அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான், அமெரிக்க ராணுவத் தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது. இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும், இடையிடையே நடைபெற்ற தாக்குதல் காரணமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால், இருதரப்பிலும் போர் தீவிரமாகி வருகிறது.
அதேநேரத்தில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த அமைதியான காலகட்ட நிலையில், மத்திய கிழக்குப் போரைத் தீவிரமாக்க ஈரான் முயல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, தனது இராணுவத்தை வலுப்படுத்தி வருவதாகவும், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான உற்பத்தியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, ஈரான் அரசாங்கம் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு (IRGC) அதிக ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும், ஈராக் மற்றும் ஏமனில் உள்ள தனது நட்புப் போராளிக் குழுக்களான ஹவுதிக்கு ஈரான் அரசு தனது ஒருங்கிணைப்பையும் விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையானது, செங்கடலைச் சுற்றி ஏவுகணைகள், கடற்படை ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை நிலைநிறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சவூதி அரேபியாவின் துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி வசதிகள் சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களையும் இலக்குப் பட்டியல்களையும் ஹவுதி அமைப்பினருக்கு IRGC வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவிர, அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள இலக்குகளை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பதற்றம் அதிகரித்திருப்பது வளைகுடா நாடுகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், பொருளாதாரத் தடைகளும் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையும் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.