Crude oil Reuters
உலகம்

உலகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? சீரியஸ் ஆகப்போகும் சிக்கல்? ஈரான் கொடுத்த பகீர் எச்சரிக்கை!

உலக நாடுகள் கடும் நெருக்கடியான ஒரு நிலைக்குத் தள்ளப்படலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். அதற்கு வலிமையான காரணம் ஒன்று இருக்கிறது. அது என்ன? அது ஒட்டுமொத்த உலகத்தையும் எப்படிப் பாதிக்கக்கூடும்? விரிவாக பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறித்த கவலை உச்சத்தை அடைந்துள்ளது. முக்கியமான இந்த கடல்வழிப் பாதையை அவசரமாகத் திறப்பதற்கான முயற்சிகள் தற்போது கட்டாயமாகியுள்ளன. உலக நாடுகளின் எண்ணெய் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருவதாகச் சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது முக்கியமானதாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், அந்தப் பகுதியில் அமெரிக்காவின் கட்டுப்பாடு தொடர்ந்து இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால், நடைமுறையில் இந்த முக்கிய கடல்வழிப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

இதற்கிடையே, பாரசீக வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் ஏற்பட்டுள்ள எண்ணெய் மாசுபாட்டுக்காக ஈரான் இழப்பீடு கோரியுள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள கெஷ்ம் தீவின் கடற்கரையில் எண்ணெய்ப் படலங்கள் கரை ஒதுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகள் புவியியல் தகவல்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Strait of Hormuz

மறுபுறம், அமெரிக்கா–ஈரான் இடையேயான போர் நீடிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரெசா நக்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும்வரை போரைத் தொடரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 'போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு அனுபவத்தை நாங்கள் பெறுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.