ஹார்முஸ் ஜலசந்தியின் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் புதிய விதிமுறைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹார்முஸ் வழியாகப் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிசெய்ய, அவ்வழியே செல்லும் அனைத்துக் கப்பல்களும் இந்த ஆவணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் அமெரிக்கப் படைகள் அப்பகுதி வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கின. மேலும், ஈரானுக்குச் சுங்க வரி தரக்கூடாது எனவும் தெரிவித்திருந்தன. இந்த பரபரப்புக்கு மத்தியில் இருதரப்பிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக, பாரசீக நீரிணை ஆணையம் (PGSA) என்ற புதிய அமைப்பை ஈரான் நிறுவியுள்ளது. அது, ‘கப்பல் தகவல் அறிவிப்பு’ என்ற படிவத்தை வெளியிட்டுள்ளது, கப்பல்கள் நீரிணை வழியாகச் செல்வதற்கு முன்பு இப்படியைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் படிவத்தில் கப்பல்கள் தங்களின் பெயர் மற்றும் அடையாள எண், முந்தைய பெயர்கள், புறப்படும் மற்றும் சேரும் நாடுகள் போன்ற விவரங்களை வழங்குமாறு கோரும் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்கள், இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களின் தேசிய இனங்கள் குறித்த தகவல்களையும், கப்பலில் உள்ள சரக்குகளின் விவரங்களையும் அது கோருகிறது. PGSA-வின்படி, ஒரு கப்பல் நீரிணையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பூர்த்தி செய்யப்பட்ட தகவல்கள் அதிகார அமைப்புக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணமே, முழுமையான தகவல் அவசியம் எனக் கருதப்படும் நிலையில், இதில் ஏதேனும் தகவல்களைத் தவறாகத் தந்தால் அதற்கு விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார். இதனால், ஏற்படும் விளைவுகளையும் அவரே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதுபோன்ற விவரங்களை ஈரான் முறைசாரா முறையில் கேட்டு வந்ததாகவும், ஆனால் புதிய அமைப்பு அந்த செயல்முறையை முறைப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.