ஈரான் முக்கியத் தலைவர்கள் Reuters
உலகம்

ஈரானில் உச்சத் தலைவர் ஆட்சியைக் கவிழ்க்க சதி? சமரசவாதிகளுக்கு மரணம்.. தீவிர கொள்கைவாத குழுக்கள்!!

அமெரிக்காவுடனான சமரசத்தை எதிர்த்து, ஈரான் அரசின் தற்போதைய அணுகுமுறைக்கு எதிராக அந்நாட்டிற்குள்ளேயே கடும்போக்கு அணிகளின் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Premkumar S

ஈரான் தலைவர்கள் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் போது உச்ச தலைவரின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து வருவதாகவும், நாட்டின் புரட்சிகர அமைப்பை பலவீனப்படுத்தி வருவதாகவும் ஈரானின் தீவிர கொள்கைவாதக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் ”சாஃப்ட் கூப்” எனப்படும் மென்மையான ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஈரான் - அமெரிக்க மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டுப் பிளவுகளை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளன.

அயதுல்லா அலி காமேனி

ஈரான் அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போதே, இதுகுறித்தான சர்ச்சைகள் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தன. குறிப்பாக, ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் கமேனியின் சவப்பெட்டிக்கு அருகில் நடந்து சென்றபோது, ​​துக்கம் அனுசரித்தவர்களில் ஒரு பிரிவினர், மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக, "சமரசம் செய்பவனுக்கு மரணம்" என்று முழக்கமிட்டனர்.

அதேபோல, டிரம்ப் நிர்வாகத்துடன் போர்நிறுத்தம் மற்றும் தடைகள் தளர்வு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், காமேனியின் இறுதிச் சடங்கின்போது, ”துரோகி, காட்டிக்கொடுப்பவர்" என்ற முழக்கங்களுடன் அங்கு கூடியிருந்தவர்கள் அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால், அராக்சி அந்த இடத்தில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

மொஜ்தபா காமேனி

இந்தசூழலில் தான், புதிதாக உச்சத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மொஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில், ஈரானின் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தின் முக்கிய முகங்களாக உருவெடுத்துள்ள நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஜனாதிபதி பெஷெஷ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அராக்சி ஆகியோர் மீதான தீவிர கொள்கை வாதிகளின் விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.

குறிப்பாக, கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டதன் மூலம், நாட்டின் வெளிப்படையான தலைமை அவரது புரட்சிகர மரபைக் கைவிட்டுவிட்டது என்று நம்பும் ஈரானின் கடும்போக்கு பிரிவினரிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. அதேசமயம், "மொஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில், அவரை அனைவரும் நேரடியாக அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், ஜனாதிபதி பெஷெஷ்கியான் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் ஆகியோர் மொஜ்தபாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக தீவிர கொள்கைவாத பிரிவுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஈரான் முக்கியத் தலைவர்கள்

இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில், "உங்கள் கழுத்தில் அமெரிக்கா கத்தியை வைத்திருக்கிறது" என்ற வாசகத்துடன், அமெரிக்காவுடன் சமரசம் செய்பவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் பிரச்சாரங்களும் ஈரானில் தீவிரமடைந்து வருகின்றன.

இதன் மூலம், அமெரிக்காவுடனான சமரசத்தை எதிர்த்து, ஈரான் அரசின் தற்போதைய அணுகுமுறைக்கு எதிராக அந்நாட்டிற்குள்ளேயே கடும்போக்கு அணிகளின் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.