trump & mojtaba  Pt web
உலகம்

ஈரான் சொத்துகள் விடுவிக்கப்படுமா? 100 பில்லியன் டாலர் எங்கே உள்ளது?

முடக்கப்பட்டுள்ள 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.

PT WEB

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. முன்னதாக ஏப்ரல் 10 அன்று, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ’பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முந்தைய நாள், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும்’ என்று 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார்.

JD Vance & Pak Pm

ஏப்ரல் 11 அன்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, ​​ஈரானின் முடக்கிய சொத்துக்களை விடுவிக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டதாகச் சில செய்திகள் வெளியாகின; ஆனால், இதை அமெரிக்க அரசாங்கம் உடனடியாக மறுத்துவிட்டது.

தற்போது ஈரான் அமெரிக்கா இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, பிற நாடுகளில் முடக்கப்பட்டுள்ள அதன் சொத்துக்களை விடுவிப்பது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்தத் தடைகள் 1979 முதல் ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்து வருகின்றன; இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அமெரிக்கப் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்தபோது முதலில் முடக்கப்பட்டது. பின்னர், ஈரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் காரணமாக இவை மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.

iran hostage crisis

வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களின் மதிப்பு தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சில ஈரானிய அறிக்கைகள் அதன் மொத்தத் தொகையை 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்காகும். ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள், ஹைட்ரோகார்பன் விற்பனை மூலம் ஈரான் ஆண்டுதோறும் ஈட்டும் வருவாயைவிட சுமார் மூன்று மடங்கு அதிகம் என்று அல்ஜசீரா செய்தி அறிக்கை கூறுகிறது.

'முடக்கப்பட்ட சொத்து' என்றால் என்ன?

ஒரு நாட்டின் அதிகாரம் பெற்ற அமைப்பு அல்லது ஒரு சர்வதேச அமைப்பு, ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது வேறொரு நாட்டின் மத்திய வங்கியின் சொத்துகள், நிதிகளை தற்காலிகமாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதுதான் 'சொத்துக்களை முடக்குதல்' (freezing assets) என்று அழைக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் குறிப்பாக, மேற்கத்திய நாடுகளால் தங்கள் போட்டியாளர்களைக் குறிவைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஈரான் மட்டுமல்லாமல், ரஷ்யா, சீனா, வட கொரியா, வெனிசுலா, லிபியா மற்றும் கியூபா ஆகியவற்றின் சொத்துகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முடக்கியுள்ளது.

ஈரானின் சொத்துக்கள் எங்கே முடக்கப்பட்டுள்ளன?

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஈராக் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் ஈரானின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அல் ஜசீரா வெளியிட்ட அறிக்கையின்படி, ஜப்பான் சுமார் 1.5 பில்லியன் டாலரையும் சீனா குறைந்தபட்சம் 20 பில்லியன் டாலரையும், இந்தியா 7 பில்லியன் டாலரையும், ஈராக் 6 பில்லியன் டாலரையும் வைத்துள்ளன. அமெரிக்கா 2 பில்லியன் டாலரையும், ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் 1.6 பில்லியன் டாலரையும் வைத்துள்ளது

மேலும், கத்தார் சுமார் 6 பில்லியன் டாலரை வைத்துள்ளது. ஆனால் அந்தத் தொகை ஈரானுக்குச் செலுத்துவதற்காக தென் கொரியாவிலிருந்து மாற்றப்பட்டது, பின்னர் அமெரிக்காவால் தடுக்கப்பட்டது.

ட்ரம்ப்

பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே நெருக்கடியில் சிக்கியிருந்தது; இத்தடைகள் அதன் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியதுடன், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தொழில்நுட்பத்தை நவீனமயமாக்குவதற்குமான அதன் திறனையும் மட்டுப்படுத்தியது . பணவீக்கத்தின் அதிகமானதாலும் அந்நாட்டின் பணமான ரியால்'-இன் வீழ்ச்சியும் நாட்டின் பிரச்சினைகளை மேலும் அதிகரித்தன; போரின் போது ஏற்பட்ட உள்கட்டமைப்பு அழிவுகளால் இப்பிரச்சினைகள் இன்னும் தீவிரமடைந்துள்ளது . முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட்டால் அது ஈரானுக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்