iran war  web
உலகம்

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரானின் 'நஸ்ர்-2' பதிலடி.. தீவிரமாகும் பதற்றம்!!

டிரம்ப் உத்தரவின் பேரில் ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் மீது 5 மணி நேர அமெரிக்க தாக்குதல்; அதற்கு பதிலாக 'ஆபரேஷன் நஸ்ர்-2' மூலம் பஹ்ரைன் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் : M. மீரா

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதும், நிலத்தடியில் ஆழமாக அமைந்துள்ள 'பிக்காக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) என்ற இடத்தை அமெரிக்கா அழித்துவிடும் என்று அவர் கூறினார்.

trump

நாங்கள் 'பிக்காக்ஸ் மவுண்டன்' பகுதியை அழிக்கப் போகிறோம்," என்றும் ஈரானியர்களிடம் தயாராக இருக்குமாறு சொல்லுங்கள். இதைத் தடுக்க அவர்களால் முடியாது" என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து டிரம்பின் உத்தரவின் பேரில், ஜூலை 13 இரவு சுமார் 5 மணி நேரம் புஷெஹ்ர், சாபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடந்தது.

இதன் பின் , இந்தத் தாக்குதல்கள் ஈரானியப் படைகளுக்குக் கடும் இழப்பை ஏற்படுத்தும். மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் தளங்கள் மற்றும் கடற்படை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்ததாக அமெரிக்காவின் CENTCOM தெரிவித்தது.

iran war

இந்த 5 மணி நேரத் தாக்குதலில் ஈரானின் பல நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; மேலும், இத்தாக்குதல்களில் நான்கு பேர் காயமடைந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஈரான் தெரிவித்தது .

இதனைத் தொடர்ந்து தென் ஈரானிய பகுதிகளில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவு மற்றும் விமானத் தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் 'ஆபரேஷன் நஸ்ர்' நடவடிக்கையின் கீழ் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. மேலும் இது தங்களின் இரண்டாவது கட்டப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.

iran war

ஈரானின் 'Operation Nasr 2'

ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானத் தளம் மற்றும் அல் ஜுபைர் அமெரிக்க ராணுவத் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஷேக் ஈசா தளத்தில் உள்ள அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் கட்டுப்பாட்டு மையம், ஹெலிகாப்டர் பராமரிப்பு மையம் மற்றும் அதிநவீன P-8 ரக மின்னணுப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த விமானக் கூடம் தாக்கப்பட்டது.

அல் ஜுபைர் தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் தங்கும் விடுதிகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் ஆகியவையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

இருப்பினும், இந்தத் சேதங்கள் குறித்துப் பஹ்ரைன் அரசோ அல்லது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இரண்டு கப்பல்களையும் ஈரான் குறிவைத்தது; இதில் ஒரு மாலுமி கொல்லப்பட்டார். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.