ஏமனில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், ஈரான் ஆதரவு ஹவுதி படைகள் சவுதி ஆதரவு ஏமன் அரசுப் படைகள் மீது மாரிப் மாகாணத்தில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதி சவுதி கூட்டணியின் ‘ரெட் லைன்’ எனக் கருதப்படுகிறது. அமெரிக்கா வழங்கிய ஆயுத, உளவுத் தகவல் ஆதரவு இந்த மோதலை பிராந்திய பினாமி போராக்கியதாக விமர்சனம் எழுகிறது.
செய்தியாளர் - M. மீரா
ஏமனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகளின் நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, எண்ணெய் வளம் மிக்க மாரிப் மாகாணம் மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது.
சமீபத்திய தாக்குதல்களில் ஏமன் அரசுப் படைகளைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டு, 12 பேர் காயமடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 58 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாரிப் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் குறைந்தது 2 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்ததாக ஏமன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாரிப் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 7 ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஏமன் ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
மாரிப் ஏமனின் முக்கியமான எண்ணெய் வயல்கள், எரிசக்தி நிலையங்கள் மற்றும் இயற்கை வளங்களை கொண்டுள்ள பகுதி. மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசின் முக்கிய கோட்டையாகவும் இது உள்ளது.
மாரிப்பை கைப்பற்றுவது ஹவுதிகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்பதால், சவுதி அரேபியா அதை கடுமையாக எதிர்க்கிறது. 2015 முதல் ஏமன் அரசுக்கு ஆதரவளித்து வரும் சவுதி தலைமையிலான கூட்டணி, மாரிப் ஹவுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது சவுதியின் ‘ரெட் லைன்’ என்று எச்சரித்துள்ளது.
போரின் பின்னணி
2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி (Abdrabbuh Mansur Hadi) அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன், அந்நாட்டின் தலைநகரான சனாவை (Sanaa) ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும், ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது.
ஈரானின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைத் தடுக்கவும், வீழ்த்தப்பட்ட ஏமன் அரசை மீண்டும் நிறுவவும் 2015-இல் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி ஏமன் போரில் களமிறங்கியது.
இந்த மோதலைத் தீவிரப்படுத்தி நீடிக்கச் செய்ததில் அமெரிக்காவிற்குப் பெரும்பங்கு உண்டு. சவுதி கூட்டணிக்கு பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்பில் அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்தது, வான்வழி எரிபொருள் நிரப்பும் உதவிகள் மற்றும் துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கியதன் மூலம் அமெரிக்கா சவுதியின் தாக்குதல்களுக்குப் பலமாக நின்றது. இது போரின் அழிவைப் பலமடங்கு அதிகரித்து, ஏமனைப் பேரழிவுகரமான மனிதநேய நெருக்கடிக்குத் தள்ளியது.
சுருக்கமாகச் சொன்னால், போரை அமெரிக்கா நேரடியாக மூட்டிவிடவில்லை என்றாலும், தனது நலன்கள் மற்றும் ஆயுத வர்த்தகத்திற்காக ஓர் உள்நாட்டு மோதலை பிராந்தியப் 'பினாமி போராக' (Proxy War) மாற்றி வளர்த்துவிட்டதில் அமெரிக்காவின் பங்கு மறுக்க முடியாதது.