Ali Khamenei funeral எக்ஸ் தளம்
உலகம்

அலி காமேனி இறுதிச்சடங்கு.. அமெரிக்கா போட்ட அதிரடி உத்தரவு.. அச்சத்தில் உறைந்த நாடுகள்!

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகப் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்த சில நாடுகள், இடைத்தரகர்கள் மூலமாகவும், தங்களது தூதரகங்கள் மூலமாகவும் செய்திகளை அனுப்பி ஈரானிடம் மன்னிப்பு கோரியுள்ளன என அது செய்தி வெளியிட்டுள்ளது.

Prakash J

ஈரானின் அலி காமேனியின் இறுதிச் சடங்கில், அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக, பல நாடுகள் அந்த நிகழ்வில் இருந்து விலகிக்கொண்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். தொடர்ந்து மத்திய கிழக்கில் தாக்குதல் நடைபெற்ற நிலையில், தற்போது அவருடைய இறுதிச்சடங்கு அரசு முறைப்படி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 4ஆம் தேதி ஈரானின் தெஹ்ரானில் அதற்கான நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊர்வலமாக வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. தவிர, வெளிநாடுகளில் இருந்தும் தலைவர்கள் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியா சார்பிலும் தலைவர்கள் சென்ற நிலையில், அதற்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.

Khamenei's funeral

இந்த நிலையில், அலி காமேனியின் இறுதிச் சடங்கில், அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக, பல நாடுகள் அந்த நிகழ்வில் இருந்து விலகிக்கொண்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ராஜதந்திர நிர்ப்பந்தத்திற்குப் பிறகு, இரண்டு வளைகுடா நாடுகள் உட்பட குறைந்தது 13 நாடுகள் காமேனியின் இறுதிச் சடங்கில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ‘தெஹ்ரானில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டாம்’ என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தனிப்பட்ட முறையில் குறைந்தது ஐந்து அரபு நாடுகளைத் தொடர்பு கொண்டதாக தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியில், பல நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் உள்ளதாகவும், அது, இறுதிச்சடங்கு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அவர்கள் இதில் ஈடுபட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அப்படி கலந்துகொள்ளும்பட்சத்தில், அது அமெரிக்காவுக்கு எதிரான ஒரு நட்பற்ற செயலாகக் கருதப்படும் என்றும், அது அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்கத் தூதரகங்கள் பல அரசாங்கங்களுக்குத் தெரிவித்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகப் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்த சில நாடுகள், இடைத்தரகர்கள் மூலமாகவும், தங்களது தூதரகங்கள் மூலமாகவும் செய்திகளை அனுப்பி ஈரானிடம் மன்னிப்பு கோரியுள்ளன என அது செய்தி வெளியிட்டுள்ளது.