ஹார்முஸ் எக்ஸ் தளம்
உலகம்

இனி No Problem.. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்த ஈரான்.. கடும் சரிவைச் சந்தித்த எண்ணெய் விலை!

பாகிஸ்தானில், நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டது.

Prakash J

லெபனான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரான் மீண்டும் தன் வசமுள்ள ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் திறந்துவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே எண்ணெய் விலைகள் 11 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்போது இரண்டு கால வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்தவதற்கு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் போர்ப் பதற்றத்தால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பாதை வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தியாவின் 60% எரிவாயு (LPG) தேவை இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. போரின்போது, இவ்வழியாக எதிரிநாட்டுக் கப்பல்கள் சென்றால் தாக்கும் என ஈரான் எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு அனுமதியை வழங்கியது. என்றாலும், இதனால் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்தது. மேலும் எரிபொருள் விலையும் அதிகரித்தது.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை

இதற்கிடையே, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் பேரில், ஈரான் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்காவிடம் வலியுறுத்தி இருந்தது. அதில், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா அறிவித்த இருவார போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப்பின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனினும், இந்த ஒப்பந்தம் லெபனான் மீதான தாக்குதலுக்கு பொருந்தாது என இஸ்ரேல் உறுதிபடத் தெரிவித்ததுடன் தாக்குதலையும் நிறுத்தவில்லை. அதேநேரத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்னிட்டு, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் திறந்துவிட்டிருந்த நிலையில், இந்தப் போர் காரணமாக மீண்டும் அதை மூடியது. இது, எரிபொருள் தடைக்கு மேலும் வழிவகுத்தது.

இந்த நிலையில்தான், பாகிஸ்தானில், நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டது. இது, ஈரானுக்குப் பாதகமாக அமையும் எனக் கூறப்பட்ட நிலையில், அது எல்லா நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்தச் சூழலில், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஈரான் அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருந்தது. அதன்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்தப் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரான் மீண்டும் தன் வசமுள்ள ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் திறந்துவிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லெபனானில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதையில், போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் போக்குவரமும் முழுமையாகத் திறக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Crude Oil

இந்த அறிவிப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே எண்ணெய் விலைகள் 11 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. இந்த அதிரடி வீழ்ச்சியால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $91.50 ஆகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் $90.59க்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை $110-க்கு மேல் இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது இந்த அமைதி முயற்சிகளால் ஒரே நாளில் 11% முதல் 15% வரை சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.