உலகம்

UK PM: பிரதமர் போட்டியில் முந்தும் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக்- பிரிட்டனில் நடப்பது என்ன?

JananiGovindhan

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான 4-ஆவது சுற்று தேர்தலிலும் ரிஷி சுனாக் முதலிடம் பெற்றுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ள நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தேர்தல் நடத்தி வருகிறது. இதில் அக்கட்சி எம்பிக்கள் வாக்களித்து வருகின்றனர்.

முதல் சுற்றில் 8 பேர் போட்டியில் இருந்த நிலையில் அடுத்த இரு சுற்றுகளில் 4 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் 4ஆவது சுற்று தேர்தல் முடிவில் மேலும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதி அமைச்சர் ரிஷி சுனாக், வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டன்ட், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் எஞ்சியுள்ளனர்.

இம்மூவரில் ரிஷி சுனாக் 115 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். 92 வாக்குகளுடன் மோர்டன்ட் 2ஆவது இடத்திலும், 86 வாக்குகளுடன் ட்ரஸ் 3ஆவது இடத்திலும் உள்ளனர். இன்று நடைபெறும் 5ஆம் சுற்று தேர்தலில் மேலும் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

எஞ்சியுள்ள இருவரிடையே நடக்கும் இறுதிச் சுற்றில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகள் பெறுபவர் செப்டம்பர் 5ஆம் தேதி புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார்.

புதிய பிரதமர் பதவிக்கான போட்டி குறித்து சூதாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் ரிஷி சுனாக்குடன் ஒப்பிடுகையில் லிஸ் ட்ரஸ் சிறிய முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.