ரஷ்யாவின் தொழிலாளர்கள் பற்றாக்குறையை பூர்த்திசெய்யவிருக்கும் இந்திய இளைஞர்கள் web
உலகம்

போரால் நிலைகுலைந்த ரஷ்யா.. சரியான நேரத்தில் கைகொடுக்கும் இந்திய இளைஞர்கள்.. நடந்தது என்ன?

ரஷ்யா - உக்ரைன் போரால் சிதைந்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை உயர்த்த இந்திய இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

ரஷ்யா-உக்ரைன் போரால் ரஷ்யாவில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ள நிலையில், இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வர ரஷ்யா முயற்சிக்கிறது. இந்தியா-ரஷ்யா ஒப்பந்தத்தின் மூலம், இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்பு உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஆட்சிக்கு வந்த ஜெலன்ஸ்கி உக்ரைனை நேட்டோவில் இணைக்க முயன்றார். ஆனால் இதனை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக பார்த்த ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது படையெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக வந்த நேட்டோவில் உறுப்பினராக உள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போர் ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்

இந்த போர் காரணமாக ரஷ்யாவில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அதை விட அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் ரஷ்யாவில் ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் பல்வேறு வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் ரஷ்ய உற்பத்தியாளர்கள் தடுமாறி வந்தனர்.

இதனால் வேறு நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தொழிலாளர்களை கொண்டுவர ரஷ்ய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதினும் இந்தியப் பிரதமர் மோடியும் வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய ரஷ்யா துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ், உற்பத்தித் துறையில் குறைந்தது 8 லட்சம் பேர் தேவைப்படுவதாகவும், சேவை மற்றும் கட்டுமானத் துறைகளில் மேலும் 15 லட்சம் பேர் தேவைப்படுவதாகவும் கூறினார். மேலும் இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறையை இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா போன்ற நாடுகள் மூலம் ஈடுகட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதின், மோடி

அதன்படி, உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னர் இந்திய நாட்டினருக்கு ஆண்டுக்கும் சுமார் 5 ஆயிரம் பணி தொடர்பான விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 72 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஏராளமான இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நிலையில், இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் ரஷ்யாவுக்கு அழைத்து வந்த சில வெளிநாட்டினரை அந்த நாடு போருக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.