அமெரிக்கா முகநூல்
உலகம்

அமெரிக்கா| பெற்ற மகனையே கொடூரமாக குத்தி கொலை செய்த தாய்!

அங்கு 3 நாட்கள் தங்கியிருந்த நிலையில் புறப்பட வேண்டிய நேரத்தில் மகனின் கழுத்தில் தாய் கத்தியால் குத்திக்கொன்றுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவில் தாய் ஒருவர் தான் பெற்றெடுத்த பிள்ளையையே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, அந்த தாய் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதுதான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிய செய்தி.

பிரகாஷ் ராஜூ மற்றும் சரிதா ராமராஜூ இவர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் , அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்வில், கடந்த 2018 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்துள்ளனர்.

சரிதா ராமராஜூ

எனவே, தங்களது 11 வயது குழந்தை யாரிடத்தில் வளர வேண்டும் என்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்ற தீர்ப்பின்படி, இவர்களின் மகன் தந்தையிடம் வளர்க்கப்பட வேண்டும் என்றும் விரும்பும்போது தாயுடன் சில நாட்கள் இருக்க அனுமதிக்கவேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது.

இதனால், குழந்தை தந்தையிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன்படி, வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா அண்மையில் தன் 11 வயது மகனை சரிதா ராமராஜு வீட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து டிஸ்னிலேண்டுக்கு சுற்றுலாவாக அழைத்துச்சென்றுள்ளார்.

கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்த நிலையில் புறப்பட வேண்டிய நேரத்தில் மகனின் கழுத்தில் தாய் கத்தியால் குத்திக்கொன்றார்.

மகனைக்கொன்று விட்ட பதற்றத்தில் தற்கொலை செய்வதற்காக தானும் ஏதோ ஒரு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டுள்ளார். இதன் பின் விடுதி நிர்வாகத்திற்கு தொலைபேசியில் அழைத்து நடந்ததை சரிதா ராஜு கூறினார்.

விடுதி நிர்வாகம் அளித்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் சரிதா வீடு திரும்பியுள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சரிதா ராமராஜு மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தான் பெற்றெடுத்த பிள்ளை தன் கூடவே வசிக்கவே தாய் விரும்பியதாகவும் ஆனால் நீதிமன்ற ஆணைப்படி தந்தையிடம் ஒப்படைக்கவேண்டிய கட்டாயத்தில் ஏற்பட்ட வெறுப்பில் இக்கொலையை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.