உலகம்

வளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருட சிறை!

webteam

தனது வளர்ப்பு மகளை கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வருடம் சிறைத் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு வசிப்பவர் சுக்ஜிந்தர் சிங் (Sukhjinder Singh ). இவரது 9 வயது மகள் அஷ்தீப் கவுர். தனது மனைவியை பிரிந்த சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் (Shamdai Arjun) என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின் சிங், ஷம்தாய், அஷ்தீப் கவுர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் குளியலறையில் உயிரிழந்திருந்தாள். குளியல் தொட்டிக் குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய்  தெரிவித்தார். ஆனால், அஷ்தீப் கவுர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, ஷம்தாய் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர் குற்றவாளி என குயின்ஸ் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.  அதன்படி, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஷம்தாய்க்கு 22 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.