Shubhanshu Shukla எக்ஸ் தளம்
உலகம்

திரவ ஆக்சிஜன் கசிவு.. இந்திய வீரரின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Prakash J

ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இன்று செல்ல இருந்தனர். இந்த நிலையில் ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இந்த விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக இன்று மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “பூஸ்டர் ஆய்வுகளின்போது திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்ய ஸ்பேஸ் எக்ஸ் குழுவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பால்கன்-9 ஏவுதல் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய ஏவுதல் தேதியை விரைவில் பகிர்ந்து கொள்வோம்” என அது தெரிவித்துள்ளது.

Axiom4 மூலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இவர்கள், 14 நாட்கள் அங்கு தங்கி 60 அறிவியல் பரிசோதனைகளை செய்யவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.