parasailing
parasailing File Image
உலகம்

சாகச விளையாட்டின் போது இந்தியவம்சாவளி பெண் அமெரிக்காவில் பலி; ரிசார்ட் மீது வழக்கு தொடர்ந்த கணவர்

Justindurai S

அமெரிக்கவாழ் இந்தியரான ஸ்ரீனிவாசராவ் அலபர்த்தி தனது மனைவி சுப்ரஜா (33), மகன் மற்றும் மருமகனுடன் கடந்த ஆண்டு மே மாதம் விடுமுறையைக் கழிக்க புளோரிடா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் நிர்வாகம் 'பாராசெய்லிங்' விளையாடுவதற்காக கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சுப்ரஜா மற்றும் அவரது மகன், மருமகன் ஆகியோர் பாராசூட்டில் பறக்க, அந்த பாராசூட்டை விரைவாகச் சென்ற படகு கயிறு மூலம் இழுத்துச் சென்றது.

Srinivasrao Alaparthi Family

ஆனால், ஒருகட்டத்தில் மோசமான வானிலை காரணமாக காற்றின் வேகத்தில் படகிலிருந்து கயிறு துண்டிக்கப்பட்ட நிலையில் மூவரும் பாராசூட்டிலிருந்து தண்ணீரில் விழுந்துவிட்டனர். கட்டுப்பாட்டை இழந்த பாராசெய்லிங், அதனுடன் கட்டப்பட்டிருந்த அவர்கள் மூவரையும் அங்குமிங்குமாகக் காற்றில் இழுத்துச் சென்றது. அவர்களைக் காப்பாற்ற பாராசெய்லிங் ஏற்பாட்டாளர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் சுமார் இரண்டு மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் இறுதியாகக் கடற்கரை பாலத்தின் கான்கிரீட் தூணில் மோதி தண்ணீருக்குள் விழுந்தனர். இதில் சுப்ரஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தம்பதியின் மகன் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

வானிலை மோசமாக இருந்த சமயத்தில் பாராசெய்லிங்கை இயக்கியதாகவும், மேலும் விபத்தின்போது தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற முயற்சி எடுக்காமல் இருந்ததாகவும் சம்பந்தப்பட்ட ரிசார்ட் நிர்வாகம் மீது ரீனிவாசராவ் அலபர்த்தி குற்றஞ்சாட்டினார். ஏற்பாட்டாளர்களின் அலட்சியப்போக்கு காரணமாகவே தனது மனைவியை இவ்விபத்தில் இழந்துவிட்டதாகவும் ஸ்ரீனிவாசராவ் புகார் கூறினார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ரிசார்ட் நிர்வாகம் மற்றும் படகு ஓட்டிக்கு எதிராக இழப்பீடு கோரி ஸ்ரீனிவாசராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். கவனக்குறைவாகச் செயல்பட்ட பாராசெய்லிங் ஏற்பாட்டாளர்களுக்கு இந்த வழக்கில் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.