இந்தியா சீனா pt web
உலகம்

மீண்டும் பகுதிகள் பெயர் மாற்றம்.. அருணாசலில் ஆக்கிரமிக்கும் சீனா.. எதிர்க்கும் இந்தியா!

'சென்லிங்' எனப் பெயரிடப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம், மார்ச் 26 அன்று சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்திய அரசாங்கத்தால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டதுடன், காஷ்கர் மாகாணத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்.

Prakash J

இந்திய எல்லைக்குள் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது. ’ஜங்கன்’ என்று அது அழைக்கும் இந்திய மாநிலத்தின் மீதான தனது உரிமையை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 10 ஆண்டுகளில் இது ஆறாவது முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 23 இடங்களுக்கு பெய்ஜிங் சீனப் பெயர்களைச் சூட்டியுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னையில் வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தையும் அது உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக முகாம் அமைப்பது, பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக,’ஜங்கன்’ என்பது அருணாச்சல பிரதேசத்தின் சீனப் பெயராக சூட்டியுள்ள நிலையில், அம்மாநிலத்தைத் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி வருகிறது. தனது கூற்றை ஆதரிப்பதற்காக, தவாங்கில் இரண்டாவது மிக முக்கியமான திபெத்திய பௌத்த மடாலயம் இருப்பதையும், ஆறாவது தலாய் லாமா அங்கு பிறந்ததையும் சீனா உதாரணங்களாகக் காட்டுகிறது. இதற்காக, 2017-ஆம் ஆண்டில் ஜாங்னானில் உள்ள ஆறு இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களின் முதல் பட்டியலை சீன குடிமை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டில் 15 இடங்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலும், 2023-ஆம் ஆண்டில் 11 இடங்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு பட்டியலும் வெளியிடப்பட்டன. தொடர்ந்து 2024 ஏப்ரல் மாதத்திலும், கடந்த ஆண்டு மே மாதத்திலும் இதே நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டது. எனினும், இதற்கு ​​இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய பட்டியலில், இந்திய எல்லைக்குள் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது. ’ஜங்கன்’ என்று அது அழைக்கும் இந்திய மாநிலத்தின் மீதான தனது உரிமையை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 10 ஆண்டுகளில் இது ஆறாவது முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 23 இடங்களுக்கு பெய்ஜிங் சீனப் பெயர்களைச் சூட்டியுள்ளது.

இந்த நிலையில், சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, 'சென்லிங்' எனப் பெயரிடப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம், மார்ச் 26 அன்று சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்திய அரசாங்கத்தால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டதுடன், காஷ்கர் மாகாணத்தின் கீழ் நிர்வகிக்கப்படும். காரகோரம் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள இந்த அலகின் உருவாக்கம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இரண்டிற்கும் அருகாமையில் இருப்பதால், குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் உய்குர் பிராந்தியமான சின்ஜியாங்கில், ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் சீனாவால் உருவாக்கப்பட்ட மூன்றாவது புதிய மாவட்டம் இதுவாகும். முன்னதாக, ஹீயான் மற்றும் ஹெகாங் மாவட்டங்களின் அதிகார வரம்பின் சில பகுதிகள் லடாக்கிற்குள் வருவதாகக் கூறி, இந்தியா கடந்த ஆண்டு சீனாவிடம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது இந்த விவகாரம் மேலும் எல்லைப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இந்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள இடங்களுக்குப் புனைப்பெயர்களைச் சூட்டுவதற்கான சீனத் தரப்பின் எந்தவொரு விஷமத்தனமான முயற்சிகளையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. பொய்க் கூற்றுக்களை முன்வைப்பதற்கும், ஆதாரமற்ற கதைகளை உருவாக்குவதற்கும் சீனா மேற்கொள்ளும் இதுபோன்ற முயற்சிகள், அருணாச்சல பிரதேசம் உட்பட எந்த இடங்களும் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்தன; இருக்கின்றன, எப்போதும் அப்படியே இருக்கும் என்ற மறுக்க முடியாத உண்மையை மாற்றிவிட முடியாது. சீனத் தரப்பின் இந்தச் செயல்கள், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளை நிலைப்படுத்தவும் இயல்பாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. உறவுகளில் எதிர்மறைத் தன்மையைப் புகுத்தும் மற்றும் சிறந்த புரிதலை உருவாக்குவதற்கான முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்களில் இருந்து சீனா விலகி இருக்க வேண்டும்” என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.